Manikandan Makkal Kaavalan
கோலிவுட் செய்திகள்

முதல்முறை ஆக்‌ஷன் ஹீரோவாக மணிகண்டன்! | Manikandan | Makkal Kaavalan

’மக்கள் காவலன்’ என்பது கலா்சார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட தனித்துவமான ஆக்‌ஷன் டிராமா.

Johnson

மணிகண்டன் நடிப்பில் சந்தோஷ் குமார் இயக்கியுள்ள படம் `மக்கள் காவலன்'. அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு எனப் பலரும் நடித்துள்ளனர். ’குட் நைட்’, ’லவ்வர்’, ’குடும்பஸ்தன்’ என குடும்ப படங்களாக நடித்து வந்த மணிகண்டன், தனது திரைப்பயணத்தில் முதல்முறையாக முழுநீள ஆக்‌ஷன் டிராமாவில் கதாநாயகனாக அவர் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையைச் சொல்கிறது. ஆனால் ஊழல் நிறைந்த ஓர் அமைப்பு, அவனுக்குச் சரணடைவதா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற இரண்டு வழிகளையே விட்டுச் செல்கிறது. ஒருவரின் உயிர்வாழ்வுக்கான போராட்டமாகத் தொடங்கும் இந்தப் பயணம், அவர் விரும்பாமலேயே மக்களின் தலைவராக மாறும் அளவுக்கு வளர்கிறது. 

இப்படம் பற்றி நடிகர் மணிகண்டன் கூறியபோது, “ ‘மக்கள் காவலன்’ என்பது கலாசார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட தனித்துவமான ஆக்‌ஷன் டிராமா. இந்தக் கதையின் புதுமையும், நேர்மையும் என்னை உடனே கவர்ந்தது. அதுவே இந்தப் படத்தில் நடிக்க என்னைத் தூண்டியது. இது விறுவிறுப்பான, தீவிரமான, இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான திரைப்படம். சந்தோஷ் இந்தக் கதையை முதன்முதலாகச் சொன்னபோதே நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். இது எங்கள் அனைவரின் கனவு படம். நாங்கள் நினைத்தபடியே இந்தப் படம் உருவாகியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் குமார் கூறியபோது, “ ‘மக்கள் காவலன்’ எனது முதல் முழுநீளத் திரைப்படம். நான் சந்தித்த மனிதர்கள், நான் வாழ்ந்த அனுபவங்கள், நான் நேரில் கண்ட உண்மைகள் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்தே இந்தக் கதை உருவானது. அதிகார அமைப்புகளுக்குள் இருக்கும் படிநிலைகளையும், அதனால் உருவாகும் சமத்துவமின்மையையும் இந்தப் படம் பேசுகிறது.

Manikandan

அதேநேரத்தில், அந்த அமைப்புக்குள் தனது நேர்மையைக் காப்பாற்றப் போராடும் ஒரு மனிதனின் கதையையும் இது சொல்கிறது. இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான நேர்மையையும் தீவிரத்தையும் மணிகண்டன் மிகச் சிறப்பாகக் கொண்டுவந்துள்ளார். இந்தக் கதையை நம்பி, என் முதல் முழுநீள திரைப்படத்திற்கு வாய்ப்பு வழங்கிய பிர்லா ஸ்டூடியோஸுக்கும் நீலம் ஸ்டூடியோஸுக்கும் என் மனமார்ந்த நன்றிகள” என்றார்.