நடிகர் பிரபுதேவா நடித்த `மனதை திருடிவிட்டாய்' படத்தை இயக்கிய நாராயணமூர்த்தி (59) மாரடைப்பால் காலமானார்.
`மனதை திருடிவிட்டாய்', 'ஒரு பொண்ணு ஒரு பையன்' படங்களை இயக்கிய நாராயணமூர்த்தி, `நந்தினி', `ராசாத்தி' ,`ஜிமிக்கி கம்மல்', `அன்பே வா', `மருமகளே வா' போன்ற தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கினார். உடல்நிலை குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இவர் நேற்று இரவு 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.
இவரின் மனைவி அம்சவேணி, மகன் லோகேஸ்வரன். மகன் தற்போது வெளிநாட்டில் லண்டனில் பணியாற்றி வருகிறார். மகன் வந்த பிறகுதான் இறுதிச் சடங்கு என்பதால், இயக்குநர் நாராயணமூர்த்தியின் உடலை தனியார் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். வெள்ளிக்கிழமை (26.09.25) அன்று பம்மலில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.