லெஜண்ட் சரவணன் நடிப்பில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `லீடர்'. இப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் துரை செந்தில்குமார், "கோவிட் சமயத்தில் எல்லோருக்கும் பிரச்னை இருந்தபோது, ஆறேழு கதைகள் நான் எழுதினாலும், அது படமாக பிரச்னை இருந்தது. அப்போது லெஜெண்ட் சாரை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. நாங்கள் இணைந்து பணியாற்ற ஒன்லைன் எல்லாம் அமைந்த சமயத்தில்தான் ’கருடன்’ இயக்கும் சூழல் அமைந்தது. எனவே `சார் ஒரு சின்ன புராஜெக்ட் முடித்துவிட்டு வருகிறேன்' எனக் கூறினேன். நான் நினைத்தேன், அவர் வேறு இயக்குநரை வைத்து அடுத்த படத்திற்குச் செல்வார் என நினைத்தேன். `நீங்க முடிச்சிட்டு வாங்க, நான் வெயிட் பண்றேன், நம்மதான் இந்தப் படத்தைப் பண்றோம்' என்றார். அந்த வார்த்தை, அந்த நம்பிக்கைக்காகத்தான், ’கருடன்’ முடித்து ரிலீஸ் ஆகும் முன்பே இந்தப் படத்தைத் துவங்கினேன்.
லெஜெண்ட் சாருடன் இரண்டு வருடம் நான் பயணித்திருக்கிறேன். அவர் சமுதாயத்தில் பெரிய உயரத்தில் இருக்கும் மனிதர். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். அதில் இரண்டு விஷயங்களை மட்டும் இங்கு சொல்கிறேன். சாருடைய எனர்ஜி என்பது துப்பாக்கியிலிருந்து கிளம்பிய புல்லட்டைப்போல் இருக்கும். எல்லா தருணத்திலும் அவர் அப்படித்தான் இருப்பார். இந்த துறைக்குள் என்ன இலக்கை அடைய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். பன்சுவாலிட்டி என்பதையும்விட, 2 மணிநேரம் முன்கூட்டியே வந்துவிடுவார். நைட் என்ன நேரத்தில் ஷூட் முடிந்தாலும், அடுத்த நாள் காலை சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வந்துவிடுவார். நமக்காக 300 பேர் வேலை செய்கிறார்கள் சார். நான் ஹோட்டலில் தூங்கி எழுந்தபின் என்ன செய்ய போகிறேன். அதற்கு ஸ்பாட்டுக்கு வந்தால் என்ன சீன், என்ன மூட் என்பதாவது தெரியும் என்பார்.
ஊட்டியில் படப்பிடிப்பின்போது ஒரு நாள், லொகேஷனை இறுதி செய்திருந்தோம். ஆனால் கடைசி நிமிடத்தில் கேன்சல் ஆனது. எனவே இன்னொரு லோகேஷனை முடிவு செய்கிறோம். ஸ்பாட் எங்கே என நாங்களே அலைந்து திருந்து போய்ப் பார்த்தால், அங்கு அந்த அதிகாலை 5 மணிக்கும் சாரின் ரசிகர்கள் `ஷூட்டிங்குக்காக வரும் லெஜெண்ட் அவர்களே வருக வருக' என அவருக்காக பேனர் வைத்திருக்கிறார்கள். இங்கு ஓகே, ஆனால் ராஜஸ்தான் ஷூட் போனபோதும் தமிழில் சாருக்காக பேனர் வைத்திருந்தார்கள். அவரது ரசிகர்களுக்கும் நன்றி.
நான் பாலு மகேந்திரா சாருடன் ஐந்து வருடங்கள் பணியாற்றி இருக்கிறேன். இரண்டு படங்களில்தான் பணியாற்றி இருக்கிறேன். மீதமிருக்கும் நேரங்களில் நிறைய உரையாடுவோம். அப்படி ஒருநாள் அவர் சொன்ன விஷயம், ’ஒரு குருவிடம், சிஷ்யன் போய் எனக்கு பேர் புகழ் பணம் எல்லாம் வேண்டும் என்கிறான். அவனை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச் சென்று சில மரக்கன்றுகளைக் கொடுத்து ’15 வருடங்கள் இதனை சரியாக பராமரி’ என்கிறார். அவனும் அவ்வாறே செய்கிறான். அதன்பின் அந்த தோட்டம் காடாக மாறுகிறது. அதன்மூலம் பேர், புகழ், பணம் எல்லாம் அவனுக்கு கிடைக்கிறது. குருவிடம் மீண்டும் சிஷ்யன் செல்ல, ’பேர் பணம் புகழ் எல்லாம் கிடைத்ததா’ என்கிறார் குரு, ’கிடைத்தது. ஆனால் இந்த 15 வருடங்களில் ஒரு மூன்று நாட்கள் மட்டும் பராமரிப்பை செய்யவில்லை. அப்போதுதான் எனக்கு புரிந்தது, இந்த வேலைதான் எனக்கு சந்தோசம் தருகிறது’ என்றார். இதற்குப் பெயர்தான் ஞானம் என்றார் குரு. வாழ்க்கையில் கிடைக்கும் பேர், புகழ், பணம் எல்லாம் உப தயாரிப்புகள், தினம்தினம் நமக்குப் பிடித்ததை செய்வதுதான் இங்கு சந்தோஷம்’ என பாலு மகேந்திரா சார் சொன்னார். அவர் சொன்னதை வாழ்க்கையில் செய்யும் நபர் லெஜெண்ட் சரவணன். அவர் தினமும் தான் செய்வதை மிகவும் ரசித்து செய்கிறார்" என்றார்.