அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி வெளியான படம் 'இதயம் முரளி'. இந்தப் படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை (ஜூலை.17) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கயாடு லோஹர், "தமிழில் நான் முதல்முறையாக ஒப்பந்தமான படம் 'இதயம் முரளி'தான். அதனால், இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி ஆகாஷ். மக்கள் நிறைய அன்பைக் கொடுத்திருக்கிறீர்கள், அதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அமுதா கதாபாத்திரம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இந்தக் கதாபாத்திரத்தை என்னை நம்பிக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி.
நான் முன்பே சொன்னதுபோல இது எனது முதல் தமிழ்ப்படம். ’டிராகன்’ படத்துக்கு முன்பே இந்தப் படத்தில் ஒப்பந்தமானேன். சாம் கதாபாத்திரத்தையும் என்னிடம் இயக்குநர் சொன்னார். அமுதா பாத்திரத்துக்கு ப்ரீத்தியையும் லுக் டெஸ்ட் செய்தனர். எனவே, யார் எந்தப் பாத்திரத்தில் நடிப்பது என்ற குழப்பம் வந்தது. ஆனால், எல்லாம் சரியாக அமைந்து வந்தது. அமுதாவாக நான் நடித்தபோது எனக்குள் இருந்த பெர்ஃபாமரைப் பார்த்தார்கள். மீண்டும், இதே படக்குழு இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆகாஷிடம் கேட்டுக்கொள்கிறேன்.
ப்ரீத்தி இந்தப் படத்தில் இணைந்ததற்கு நன்றி. நான் இந்த துறையில் மிகவும் நம்பும் ஒரு தோழி நீங்கள். மிகவும் அழகாக இருக்கிறீர்கள். இதயா (அதர்வா) இந்தப் படத்தில் இருவரும் இணைந்து அதிக இடங்களில் நடிக்கவில்லை என்றாலும் நாம் இணைந்து வரும் காட்சிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
மீண்டும் நாம் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும். இந்தப் படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கு ரொம்ப நன்றி. உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும், இதயா அடுத்த வாட்டி லேட்டா வராதீங்க" என்றார்.