சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் சாய் அபயங்கர், " ‘கருப்பு’ படத்தின் பாடல்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மலைக்க வைப்பதாக உள்ளது. அது என்னை மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. சூர்யா சார் பல கல்ட் (Cult) திரைப்படங்களை வழங்கி இருக்கிறார்.
அப்படிப்பட்ட சூழலில் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு வந்தபோது, நான் உடனடியாக அதை ஏற்றுக் கொண்டேன். பாலாஜி அண்ணா உடன் நடந்த முதல் சந்திப்பு மிகச் சிறப்பாகவும் மிக விசேஷமானதாகவும் அமைந்தது. ஆரம்பத்தில் எனக்குச் சற்று தயக்கம் இருந்தது. இயக்குநர் ஆர்.ஜே.பி அண்ணாவைச் சந்திப்பதற்காக நான் காரில் சென்று கொண்டிருந்தேன். ஆனால் செல்லும் வழியிலேயே ட்விட்டரில் 'சூர்யா 45' படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்ற செய்தியைப் பார்த்தேன். என் உடல் சிலிர்த்துப் போனது. அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது.
இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஒருவரைத் தேர்வு செய்வதற்கு முன் வேறு எந்த ஒரு ஹீரோவாக இருந்தாலும் நிச்சயம் இரண்டு முறை யோசித்து இருப்பார்கள். ஆனால் சூர்யா சார் எந்த தயக்கமும் இன்றி என்னை ஏற்றுக்கொண்டு, இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்தார்.
நான் இந்தப் படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டேன். இந்தப் படத்தின் பின்னணி இசை நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும். மேலும், இந்தப் படம் ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெறும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை'' என்றார்.