சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு `வீரபத்ருடு' பட Pre-Release நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, "சூர்யா சாரின் எந்த தமிழ்ப் படமும், தெலுங்கிலும் பெரிய வரவேற்பு பெறும். டப்பிங் செய்தும் வெளியிடுவார்கள். ஆனால் இந்தப் படம் வெறுமனே தமிழ்நாட்டு மக்களுக்கானது மட்டுமல்ல, ஆந்திரா, தெலங்கானா மக்களுக்குமானது. உங்களின் வீரபத்ரன், எங்களின் கருப்பசாமி. எதுவும் இல்லாத ஒருவன் RJ ஆனேன், நடிகன் ஆனேன். நடிப்பு எனக்குச் சரிவரவில்லை எனவே, இயக்குநராக மாறினேன். ஆனால், நான் ஒருபோதும் சூர்யா சார் படத்தை இயக்குவேன் என நினைத்ததில்லை. என்னை நம்பி எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி சார்.
எப்போதும் மக்கள் ஒருவர் மேல் நம்பிக்கை வைப்பது சாதாரணமாக நடக்காது. சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது பலருக்கு மாற்றுக்கருத்து இருந்தது. ஆனால், அவர் அதை எல்லாம் மீறி தன்னுடைய முயற்சிகளைச் செய்தார். இப்போது அவர் தமிழ்நாட்டின் முதலைமைச்சர் ஆகிவிட்டார். மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய். இரண்டு ஆண்டுகள் முன் அவர் அரசியலுக்கு வந்தபோது, அவரை பலர் நம்பவில்லை. ஆனால், அவரால் முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. அதுவேதான் இங்கு பவன் கல்யாண் சாருக்கு நடந்தது. மக்கள் ஒருவரை நம்பும்போது அது பெரிய ஆற்றலாக மாறும். அதுவேதான் எனக்கும். நான் என்னை நம்பினேன். இப்படத்துக்கு நான் இயக்குநர் என அறிவித்தபோது சூர்யா சாரிடம்கூட, ’ஏன் ஆர்.ஜே.பாலாஜி’ என்ற கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால், படத்தின் டீசர் வந்தபின்னர் என்மேல் நம்பிக்கை வந்தது. ட்ரெய்லர் வந்த பின்னர், சூர்யாவுக்கு ஆர்ஜே பாலாஜி வில்லனா என கேள்விகள் எழுந்துள்ளது. மீண்டும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, மீண்டும் நான் அமைதியாக இருந்து படம் அதனை நிரூபிக்கும் எனக் காத்திருக்கிறேன்.
ட்ரெய்லரிலேயே படத்தின் கதை இருக்கிறது. ஆனால், படத்தில் இன்னும் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. நான் மிகையாகச் சொல்லி படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்க விரும்பவில்லை. இது பொழுதுபோக்கான மாஸ் மசாலா படம். `அயன்', `சிங்கம்' படங்களில் நாம் பார்த்தது போன்ற ஒரு சூர்யாவை இதில் காட்ட நினைத்தேன்.
இது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மக்களுக்காக உருவாக்கப்பட்ட படம். சமூக வலைத்தளங்களில் இருப்பவர்களுக்காக அல்ல. சினிமாவைக் கொண்டாடும் நபர்களுக்கான படம், சமூக வலைதளங்களில் சினிமாவை கூறுபோடுபவர்களுக்கானது அல்ல" என்றார்.