தனுஷ், மமிதா பைஜூ, ஜெயராம், கருணாஸ் எனப் பலரும் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் `கர'. ஏப்ரல் 30ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படம் தொடர்பான பேட்டிகளை அளித்து வருகிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. அப்படியான பேட்டி ஒன்றில், `ஜனநாயகன்' படம் கசிந்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விக்னேஷ் ராஜா, "அது மிகவும் துரதிர்ஷ்டமானது, வலிமிகுந்தது, அச்சுறுத்தக்கூடியது. அது வந்தது எனக் கேள்விப்பட்டதும் எங்கள் குழுவினருக்கு போன் செய்து கூகுள் ட்ரைவில் இருக்கும் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பாதுகாக்கும்படி கூறினேன். இது நம்பிக்கை சார்ந்த விஷயம். எல்லா வேலைகளையும் நாமே செய்ய முடியாது. ஏதாவது ஓர் இடத்தில் நீங்கள் மற்றவர் மேல் நம்பிக்கை வைத்தே ஆக வேண்டும்.
அந்த மாதிரி ஒரு சூழலில் இப்படி நடப்பது மிகவும் துரதிர்ஷ்டமானது, வலிமிகுந்தது. நாம் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டும். எப்படி இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வருவது எனவும் தெரியவில்லை. ஆனால் மக்கள் அவர்களுடைய மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும். இப்படத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கும் உழைப்பை மதிக்க வேண்டும். உங்களுக்கு பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதை எல்லாம் தாண்டி, அதனை முறையாக பார்ப்பதுதான் சரியானது. நிச்சயமாக படம் வெளியாகும்போது தியேட்டருக்கு மக்கள் வந்து பார்ப்பார்கள் என நம்புகிறேன்" என்றார்.