சமுத்திரக்கனி நடிப்பில் நவீன்குமார் பழனிவேல் இயக்கியுள்ள சீரிஸ் `தடயம்'. இதில் ஷிவதா, ராஜ் திரன்தாஸ், மூணார் ரமேஷ், சுந்தர பாண்டியன், பிரேம், கொற்றவை எனப்பலரும் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் பிப்ரவரி 27ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய சமுத்திரக்கனி " `தடயம்' குறுகிய காலத்தில் எடுத்து முடித்துவிட்டோம். இவ்வளவு வேலை பார்த்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. தெலுங்கு சினிமாவுக்கு சென்ற பின்னர் கொஞ்சம் சொகுசாகிவிட்டேன். ஹீரோ வந்த பின்னர் தான் என்னை கூப்பிடுவார்கள். எனவே 11 மணிக்கு தான் போவோம், அவர் 4 மணிக்கு கிளம்பிவிட்டால் நம்மையும் அனுப்பிவிடுவார்கள். இப்படியே இருந்தவனை, திடீரென காலை 8 மணிக்கு போனால் 2 மணி வரை ஷுட் என்பது புதிதாக இருந்தது.
என்ன இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டால் அமைதியாக அப்படியே பார்ப்பார்களே தவிர எதுவும் சொல்ல மாட்டார்கள். இது ஒரு அழகான பயணம். மிகவும் சந்தோஷமாக இருந்தது. இந்தக் கதையை கௌஷிக் கூறிய போது 10 நிமிடங்கள் தான் கூறினார். அதிகாரம் எளியவர்களை எப்படி எல்லாம் காயப்படுத்துகிறது என்பதை சொல்ல வேண்டும் எனக் கூறினார். அடுத்த வாரமே படப்பிடிப்பை துவங்கினோம். இப்போது உங்கள் முன் ஒப்படைக்கிறோம்" என்றார்.