Sivakarthikeyan Thaai Kizhavi
கோலிவுட் செய்திகள்

"Industry-யில் உள்ளவர்கள் தான் தடையே!" - வெளிப்படையாக சொன்ன சிவகார்த்திகேயன் | SK | Thaai Kizhavi

கிடைக்காத வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாழ்க்கையை, இந்த வாய்ப்பை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ள முயல்கிறேன். எனக்கு இந்த இடத்தை கொடுத்த Industry-க்கு ஏதாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சிதான் நான் தயாரிக்கும் படங்கள்.

Johnson

ராதிகா நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `தாய் கிழவி'. இப்படம் பிப்ரவரி 27ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், ராதிகா, சூரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் "சிபி மிக்க நன்றி, தலைவர் பட இயக்குநர் நீங்கள், வந்து இவ்வளவு நேரம் நிகழ்ச்சியை சிறப்பித்து கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. இது பெரிய விஷயம். ஆனால் சிபி, நாம் ரெண்டு பேரும் தான் படம் செய்வதாக இருந்தது. என்னை விட்டுவிட்டு நீ மட்டும் தப்பித்துவிட்டாய். தலைவர் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாய். நான் என்ன செய்வது என தெரியவில்லை. ஆனா திரும்ப வர வேண்டும். ஒப்பந்தம் செய்திருக்கிறாய் அல்லவா.

சிவகார்த்திக்கேயன்

சினிமாவில் சின்ன ரோலாவது நடிக்கும் ஆசையில் வந்தவன் நான். ஆனால் லீட் ரோல், ஹீரோ வாய்ப்பு வந்து மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள். பிறகு, நான் என் குடும்பம் எல்லோருமே நன்றாக இருந்தோம். ஆனால் அது மட்டும் போதாது என தோன்றியது. நண்பர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அருண்ராஜாவுக்கு என்னைவிட சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம். அவருக்காக துவங்கப்பட்டது தான் இந்த SK புரொடக்ஷன்ஸ். கனா பட விழாவில் சொல்லி இருந்தேன். மக்கள் எல்லோரும் எனக்கு ஒரு மேடை கொடுத்திருக்கிறீர்கள். அந்த மேடையை எனக்கு கிடைத்த பணத்தின் மூலமாக கொஞ்சம் எக்ஸ்டராவாக்கி அதில் கொஞ்சம் ஆட்களை சேர்த்துக் கொள்ள நினைத்து செய்தது தான் கனா.

பெண்கள் எல்லோரும் வலிமைவாய்ந்தவர்கள் என்பதை சொல்ல நினைத்து செய்த படம் தான் `கனா'. உலகில் முதல் முறை பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்ட படம் அதுதான். அடுத்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா, வாழ், டாக்டர், டான், தயாரித்தோம். குரங்கு பெடல் என்ற படத்தை வழங்கினோம். பிறகு செய்த கொட்டுக்களியும் பெண்ணின் வலிமையை சொல்லும் படம் தான். இப்போது `தாய் கிழவி'. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் மூலம் அறிமுகமானவர் தான் சிவக்குமார் முருகேசன். இந்தக் கதை கேட்டதும் அவருடன் அடுத்த படத்தையும் ஒப்பந்தம் செய்தோம். எல்லோரும் நினைக்கலாம், `தாய் கிழவி' பார்த்து தான் சேயோன் படத்தை சிவகுமாருக்கு கொடுத்தேன் என. ஆனால் முதல் நாள் கதை கேட்டதும் நான் முடிவு செய்தது. இவருடைய அடுத்த படத்தில் நாம் நடிக்கிறோம் என. இன்னும் சொல்லப்போனால் சேயோனுக்கு அடுத்த படமும் நான் அவருடன் தான் செய்ய போகிறேன்.

தாய் கிழவி

ராதிகா மேடம் தன்னுடைய கால் வலிக்கான சிகிச்சையை தள்ளி வைத்துவிட்டு இந்தப் படத்தில் நடித்து கொடுத்தார். அவரின் புரிதலுக்கு பெரிய நன்றி. அதனால் தான் படத்தை நேரத்து முடிக்க முடிந்தது.

நாங்கள் எல்லோரும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரு கனவுடன் ஓடிக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு பேருக்கு கிடைக்காத வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாழ்க்கையை, இந்த வாய்ப்பை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ள முயல்கிறேன். எனக்கு இந்த இடத்தை கொடுத்த Industry-க்கு ஏதாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சிதான் நான் தயாரிக்கும் படங்கள். இங்கு நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் காலி செய்யவோ, தாண்டி போகவோ வரவில்லை. எனக்கு கிடைத்த வாய்ப்பையும் வாழ்க்கையையும் சரியாக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறேன். என்னை அதற்கு விடுங்கள், அவ்வளவு தான் கேட்கிறேன். அதற்கு மக்கள் எப்போதும் எனக்கு துணை நிற்கிறார்கள். ஆனால் Industry-யில் உள்ளவர்கள் தான் தடையாக இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார் தான். ஆனால் அந்த தடைகளை நீக்கிவிட்டால் இன்னும் நான்கு சிவக்குமார் முருகேசனை எங்கிருந்தாவது நான் கொண்டு வந்துவிடுவேன்." என்றார்.