ஷர்வானந்த், ராஜசேகர், அதுல குல்கர்னி, மாளவிகா நடிப்பில் அபிலாஷ் இயக்கியுள்ள தெலுங்குப் படம் `பைக்கர்'. இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராஜசேகர், "மேடையில் தமிழ் பேசி ரொம்ப வருடம் ஆகிவிட்டது. இப்போது மேடையில் பேசியவர்களை எல்லாம் பார்த்தபின் இருக்கும் தமிழும் மறந்துவிட்டது.
இப்போது நான் மேடையில் இருக்கையில் ஷர்வாதான் கைபிடித்து அழைத்து வந்தார். ஏனென்றால், வலது கணுக்கால் 3 மாதங்களுக்கு முன் உடைந்து, இப்போதுதான் சரியாகி வருகிறது. இதற்குமுன் இடது கால்கூட உடைந்திருக்கிறது. அது எப்போது என்றால், `இதுதாண்டா போலீஸ்' படம் டிசம்பர் 8 ரிலீஸ் என அறிவித்துவிட்டு, இன்னொரு ஷூட்டிங் சென்றுவிட்டேன். அப்போது நடந்த விபத்தில்தான் கால் உடைந்தது. இது நவம்பரில் நடந்தது, டிசம்பர் முடியும்வரை இருக்க வேண்டும் எனச் சொன்னார்கள்.
ஆனால் பட ரிலீஸை வைத்துக்கொண்டு என்னால் மருத்துவமனையில் இருக்க முடியவில்லை. நேராக படத்தைப் பார்க்க இதே சத்யம் தியேட்டருக்குத்தான் வந்தேன். கால் உடைந்தால் படம் ஹிட் எனச் சொன்னார்கள்.
இப்போதும் உடைந்த காலுடன்தான் இங்கு வந்திருக்கிறேன், இந்த பைகர் படமும் ஹிட்டாகும், எனக்கு இந்தப் படப்பிடிப்பில் விபத்தானதால், அதுவும் ஹிட் ஆகும் என விரும்புகிறேன். ஹீரோ ஷர்வானந்துக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் மிகுந்த அன்போடு என்னைப் பார்த்துக் கொண்டார். படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.