தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். சமீபத்திய விருது விழா ஒன்றில் ’பைசன்’ படத்திற்கு விருது வழங்கினார். அந்த நிகழ்வில், ”2026இல் தமிழ் சினிமா எப்படி இருக்கிறது’ எனக் கேட்கப்பட, "இந்திய சினிமா எப்போதுமே முற்றிலும் இரு துருவங்களிலும் இயங்கும். சமத்துவத்தைப் பேசும் அதேநேரத்தில், வெறுப்புப் பேசும் படமும் வரும். ஒற்றுமையும் பேசுவோம், பிரிவினையும் பேசுவோம். நாம் யார் என்பதை சினிமாவில் சொல்வதற்கான துணிச்சல் எல்லோருக்கும் வந்துவிட்டது. அது நல்ல விஷயம் என நினைக்கிறேன்" என்றார்.
மாரி செல்வராஜின் வெற்றி பற்றி கேட்டதும், "மாரி செல்வராஜின் பயணமே சிறப்பானது மற்றும் தனித்துவமானதும்கூட. மக்களுடன் பிணைப்பை ஏற்படுத்தும் சிறப்பான வழியை கையில் வைத்திருக்கிறார். அவரின் முதல் (பரியேறும் பெருமாள்) படம் உருவாவதற்கு பல வருடங்கள் முன்பு, கதையாக இருக்கும் போதே நான் கேட்டிருக்கிறேன். ’அதில் ஒரு காட்சி திணிப்புபோல் இருக்கிறது’ எனக் கூறினேன். ’ஆனால், இல்லை அது மிக முக்கியமானது’ என நம்பிக்கையாக கூறினார். படம் வந்தபோது அது மிக முக்கியமானதாக இருந்தது.
பேப்பரில் படிக்கையில் இது நல்ல சினிமாவாக வரும். ஆனால், வணிகரீதியாக வெற்றி பெறுமா என்ற கேள்வி வரும். ஆனால் மாரி செல்வராஜின் அந்தப் படங்களை தமிழ்நாட்டில் எல்லா மக்களிடமும் சென்று சேர்க்க பணிபுரிகிறார். அது எல்லோரிடமும் எதிரொலிக்கும் ஒன்றாக இருக்கிறது. அது யாரையும் எதிர்க்காமல், சிந்திக்க வைக்கிறது. மேலும் அவர் படங்களை ஒப்புக்கொள்ள செய்வதற்கான சிறப்பு பாணிகளை கொண்டிருக்கிறார்.
அதில் ’பைசன்’ மிகமிகச் சிறப்பான படம். அதனுடைய வெற்றி நிறைய பேருக்கான உந்துதலாக இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கும் நம்பிக்கையை கொடுக்கும் வெற்றி அது" என்றார் வெற்றிமாறன்.