Jai Sattendru Maarudhu Vaanilai
கோலிவுட் செய்திகள்

"முருகதாஸ் சார் சொன்னதை இன்றுவரை கடைபிடிக்கிறேன்!" - ஜெய் | Jai | A R Murugadoss

அவர் தயாரிப்பில் `எங்கேயும் எப்போதும்' படம் நடித்தபோது அவருடன் பழகினேன். அவருடைய குணம், பழகும் அணுகுமுறை எல்லாம் மிகவும் பிடித்தது. அதை நானும் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

Johnson

ஜெய், மீனாட்சி கோவிந்த், யோகிபாபு நடிப்பில் பாபு விஜய் இயக்கியுள்ள படம் `சட்டென்று மாறுது வானிலை'. இப்படம் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகர் ஜெய், "என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர் என்னிடம் `உனக்குப் பிடித்த இயக்குநர் யார்' எனக் கேட்கும்போதெல்லாம், நான் சொல்லும் ஒரே பெயர், ஏஆர் முருகதாஸ். அவருடைய படங்கள் பார்த்து பிடித்தது தனி என்றால், அவர் தயாரிப்பில் `எங்கேயும் எப்போதும்' படம் நடித்தபோது அவருடன் பழகினேன். அவருடைய குணம், பழகும் அணுகுமுறை எல்லாம் மிகவும் பிடித்தது. அதை நானும் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன். அவர் சொன்ன ஒரு விஷயத்தை இப்போதுவரை நான் கடைபிடிக்கிறேன்.

’எங்கேயும் எப்போதும்’ படப்பிடிப்பின்போது, காலை 7 மணிக்கு சாரும் வந்திருந்தார். அப்போது அவர் `ஒரு சின்ன ரெக்வஸ்ட், ஷூட்டிங் டைமில் மட்டும் சீக்கிரம் தூங்கிவிடுங்கள். தாமதமாக தூங்கினால் கருவளையம் வரும். அதனை மறைக்க மேக்கப், மேக்கப்புக்கு ஏற்ப கூடுதல் லைட் என பல விஷயங்கள் மாறும். உங்களுடைய சின்ன தூக்கம் இவ்வளவு விஷயங்களில் பாதிப்பு ஏற்படுத்தும்' என்றார். எனவே, அதை நான் இப்போதும் பின்பற்றுகிறேன். இரவு 10.30 மணியாகிவிட்டால், முருகதாஸ் சார் நினைவுக்கு வந்துவிடுவார். என் நெஞ்சில் குடியிருக்கும் என மேடையில் சொல்ல வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. இந்தப் படத்தின் தலைப்பு `சட்டென்று மாறுது வானிலை' போல தான், இங்கே இப்போது பெரிய வானிலை மாற்றம் வந்திருக்கிறது. இந்த மாற்றம் இனி எப்போதும் மாறாது என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். உங்களுக்குப் பிடித்த க்ளைமேட்டாக தமிழ்நாடு இருக்கும்" என்றார்.