நடிகை கயாடு லோஹர், சாய் அப்யங்கரின் தனி இசை பாடல் ‘பவழ மல்லி’யில் நடனமாடிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இந்திய சினிமாவில் வளர்ந்துவரும் நடிகை கயாடு லோஹர். கன்னடத்தில் வெளியான Mugilpete மூலம் நடிகையான கயாடு தமிழில் Dragon படம் மூலம் பெரிய அளவில் வரவேற்கப்பட்டார். தற்போது சாய் அப்யங்கரின் தனி இசை பாடலான `பவழ மல்லி' பாடலில் நடனமாடியிருந்தார் கயாடு. இப்பாடலில் பணியாற்றியது பற்றி சமீபத்திய பேட்டியில் கேட்டக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கயாடு "அது மிகவும் தற்செயலாக நடந்தது. நடுராத்திரி என் மேனேஜர் சர்வேஷிடம் இருந்து ஒரு போன் கால் வந்தது. `சாய் உங்களிடம் பேச விரும்புகிறார்' என்று கூறினார். எனக்கு சாய் யார் என தெரியும், ஏதாவது பாடல் சம்பந்தமாக பேசுவார் எனவும் தெரியும். அவர் என்னிடம் பேசிய போது அதிகாலை 2 மணி இருக்கும். `கயாடு நாங்கள் ஒரு அழகான பாடலை வைத்திருக்கிறோம். நீங்கள் அதன் பாகமாக மாற வேண்டும், உங்களுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும்' என்றார்.
எனக்கு சம்மதம் தான், மேலும் அந்தப் பாடலை அனுப்ப சொல்லி கேட்ட உடன், இதை நான் செய்கிறேன் என முடிவெடுத்துவிட்டேன். அதில் நான் ஆடுவது நன்றாக இருக்கும், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு பாடல், ஒரு கல்யாண சூழலில் நடக்கும் பாடல் எனவே முயற்சிக்கலாம் என நினைத்தேன். நான் பயிற்சி பெற்ற நடன கலைஞர் கிடையாது, ஆனால் எனக்கு ஆட பிடிக்கும். இந்தப் பாடலுக்கு நான் இரண்டு நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இதே சமயத்தில் என்னுடைய `ஃபன்கி' படத்தின் புரமோஷன் வேலைகளும் நடந்தன. பாதி நாள் சென்னை, பாதி நாள் ஹைதராபாத் என பிரித்துக் கொண்டு பணியாற்றினேன். ஆனால் இது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது" என்றார்.