சென்னையில் வெளியான ‘Slumdog: 33 Temple Road’ டீசர் விழாவில் விஜய் சேதுபதி பேசும்போது, கன்னட நட்சத்திரமான துனியா விஜயின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு குறித்து பாராட்டினார். பூரி ஜெகன்நாத் இயக்கிய ‘எம் குமரன்’ ரீமேக் படத்தில் தாம் ஜூனியர் ஆர்டிஸ்டாக 400 ரூபாய் சம்பளத்தில் நடித்த அனுபவத்தை நினைவுகூர்ந்து, இப்போது அவரின் படத்தில் ஹீரோவாக இருப்பது பெருமை எனக் கூறினார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பூரி ஜெகன்நாத். இவர் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் `Slumdog: 33 Temple Road' என்ற தமிழ் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய விஜய் சேதுபதி “முதலில் துனியா விஜய் சாரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்றபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை நான் நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். கன்னடத்தில் அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது, மிகவும் ஒழுக்கமான, அர்ப்பணிப்பான நடிகராக இருந்தார். இயக்குநர் சொல்வதை முழுமையாகக் கேட்டு, அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக தயார் செய்து கொள்வார். அவர் ஒரு சிறந்த மனிதர், அற்புதமான நடிகர். அவருடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது.
பூரி ஜெகன்நாத் சார் ஒரு வரலாறு. எனக்கும் அவருக்கும் தெரியாமலே ஏற்பட்ட ஒரு தொடர்பு உண்டு. அவர் இயக்கிய `Amma Nanna O Tamila Ammayi' படம் தமிழில் `எம் குமரன்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதில் நான் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக 400 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தேன். இதை நான் அவரிடமும் கூறினேன். அவருடைய சினிமா பயணமும், வாழ்க்கை அனுபவங்களும் மிகவும் ஊக்கமளிப்பவை. பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். ஒரு கதையை முடித்தவுடன் அடுத்த கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு காலத்திலும் அவர் பல கதைகளை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தனித்துவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. ஒரு காட்சியை உருவாக்குவதிலும், அதை திரையில் வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் தெளிவு அபாரமானது. அவருக்கு என்ன வேண்டும், ஒரு ஃபிரேமில் என்ன இருக்க வேண்டும், எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த தெளிவு இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநருடன் பணியாற்றும்போது ஒரு நடிகராக நமக்கு மிகுந்த நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும். ‘நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள்’ என்ற நம்பிக்கையை அவர் எப்போதும் கொடுப்பார்.
படம் மிகவும் வலுவான கதையுடன் உருவாகியுள்ளது. ஆக்சன், உணர்வுகள், மனித உறவுகள் என அனைத்தும் இதில் இருக்கின்றன. பூரி ஜெகன்நாத் சாரின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘ஸ்லம் டாக்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் அவருடைய ஈடுபாடும், நம்பிக்கையும், உழைப்பும் மிகத் தெளிவாக தெரிகிறது. இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை நான் மிகவும் ரசித்தேன். இயக்குநர் மற்றும் நடிகர் இடையே உருவாகும் அந்த நம்பிக்கையும், புரிதலும் இந்தப் படத்தில் மிகவும் அழகாக அமைந்தது. பூரி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் இருக்கிறது. அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்." என்றார்.