அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ள படம் `ப்ளாஸ்ட்'. இப்படம் மே 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உட்பட படக்குழுவினரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பேசிய நடிகை அபிராமி, ''இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஆண்டில் என்னுடைய நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது. ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவும் மறக்க முடியாத தருணம். அதனால் அவருக்கு என் நன்றி. எங்கள் இருவரையும் மீண்டும் இணைந்து நடிக்க வைப்பதற்கு ஏன் 25 ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை.
ப்ரீத்தியுடன் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் இருவருக்கும் ஒரே வகையான வேவ் லென்த் இருந்தது. அதனால் படப்பிடிப்புத் தளத்தில் நாங்கள் இருவரும் உற்சாகமாக இருந்தோம். பொதுவாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களும், கதையும் எழுதுவது குறைவு. இந்தப் படத்தில் எங்கள் இருவருக்கும் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினருக்கு நன்றி. பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் எந்த நிறுவனமும், நிர்வாகமும் நன்றாக இருக்கும் என்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சிறந்த சான்று. அர்ச்சனா கல்பாத்தியும், ஐஸ்வர்யா கல்பாத்தியும் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாகக் கையாள்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.
நான் வாழ்க்கையில் ஒருவரையும் கை நீட்டி அடித்ததில்லை. எனக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் என்னை வயலன்ட்டாகவும், டெரராகவும் காட்சிப்படுத்தியதற்காக சண்டைப் பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவிற்கு நன்றி. அவருக்கு மட்டுமல்ல, அவருடைய குழுவின் பணியாற்றிய அனைத்து சண்டைக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நான் சினிமாவில் காமெடி- ஹாரர்- ரொமாண்டிக் என பல ஜானரில் நடித்திருக்கிறேன். ஆனால் முதன்முறையாக ஆக்ஷனில் நடித்திருக்கிறேன். இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்று என்மீது எனக்கே நம்பிக்கையை வரவழைத்த சண்டைப் பயிற்சி இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி." என்றார்.