விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `துருவ நட்சத்திரம்'. 2017இல் துவங்கப்பட்ட இந்தப் படம் பல தடைகள் காரணமாக நின்றுநின்று படமாக்கப்பட்டு 2023இல் படம் முழுமையடைந்து. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மதன், இயக்குநர் கவுதவ் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள கொண்டாடுவோம் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்தனர். மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரித்த `எனை நோக்கி பாயும் தோட்டா' படம் தொடர்பான நிதிப் பிரச்னை காரணமாக `துருவ நட்சத்திரம்' படத்தில் உள்ள தனது 50 சதவீத உரிமையை புண்ணியமூர்த்தி மற்றும் பிரேம்குமார் ஆகிய இருவருக்கு மதன் வழங்கினார்.
கடந்த 2023 செப்டம்பர் மாதம் படத்தின் திரைப்படச் சான்றிதழைப் பெற்றார். அப்போதிருந்து இப்படத்தை எப்படியாவது திரைக்கு கொண்டுவர முயன்று வந்தார். ஆனால், தங்களுக்குச் சேரவேண்டிய தொகையை தராமல் படத்தை வெளியிடக் கூடாது என புண்ணியமூர்த்தியும், பிரேம்குமாரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து படத்துக்கு தடை உத்தரவு பெற்றனர். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தை வெளியிட்டு அதிலிருந்து வரும் லாபத்தில் இருந்து கடன் கொடுத்தவர்களுக்கு அளிக்கும் வகையில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, `துருவ நட்சத்திரம்' படத்தை ஜூன் 15ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்தும், அன்றைய தேதிக்குள் படத்தை வெளியிட இயலவில்லை என்றால் கால நீட்டிப்புக் கோரி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் படம் தொடர்பான நிதிப் பரிவர்தனைகளை மேற்கொள்ள, தனி வங்கிக் கணக்கு துவக்க வேண்டும் என படத் தயாரிப்பு நிறுவனமான, கொண்டாடுவோம் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் தொகை, விடுவிக்கப்படும் தொகையை கண்காணிக்க வழக்கறிஞர் ஒருவரை கண்காணிப்பாளராக நியமித்தும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த வங்கிக் கணக்கில் இருந்து, படத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஊதியமாகவோ, பங்குத் தொகையாகவோ நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் வழங்கக் கூடாது என கண்காணிப்பாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வங்கிக்கணக்கு துவங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், படத்தை வெளியிடுவதற்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தக் கூடாது எனவும் மனுதாரர்கள் புண்ணியமூர்த்தி மற்றும் பிரேம்குமார் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.