Dhanush Kara
கோலிவுட் செய்திகள்

தனுஷின் `கர' படத்திற்கு வந்த சிக்கல்! | Kara vs Karaa | Dhanush | Mahendran

`கரா' என்ற தலைப்பை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டி தலைப்பைப் பதிவு செய்தோம். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இதனைப் பதிவு செய்திருக்கிறோம். இதனை முறையாக பதிவு செய்த ஆவணங்கள் எங்களிடம் உள்ளது.

Johnson

தனுஷ், மமிதா பைஜூ, ஜெயராம், கருணாஸ் எனப் பலரும் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் `கர'. ஏப்ரல் 30ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் `கரா' படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனுஷ் படத்தின் தலைப்பு `கர' என அறிவிக்கும் முன்பே `கரா' என்ற பெயரை தங்கள் பதிவு செய்துவிட்டதாக படத் தயாரிப்பு தரப்பிலிருந்து பிரேம் நாத் பேசினார்.

Kara

அதில், "2022இல் எங்கள் ஸ்ரீபூவாயி மூவீஸ் சார்பில் `கரா' என்ற தலைப்பை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டி தலைப்பைப் பதிவு செய்தோம். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இதனைப் பதிவு செய்திருக்கிறோம். இதனை முறையாகப் பதிவு செய்த ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார். இந்த தலைப்பை தனுஷ் படத்துக்கு வைத்திருக்கிறார்கள் எனத் தெரிந்த அடுத்தநாளே, தயாரிப்பாளர் சங்கத்துக்குச் சென்றோம். கடந்த இரண்டு மாதங்களாக இந்த விஷயமாக அலைகிறோம். ஏதேதோ சொல்லி எங்களை அலைக்கழிக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிந்தபிறகுகூட நாங்கள் சென்றோம், ’அப்போதும் சொல்கிறேன் சார்’ என்ற பதில் மட்டும்தான் வருகிறது. இதற்கு முழுப் பொறுப்பு தயாரிப்பாளர் சங்கம் மட்டும்தான். இதற்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் ஓரிரு நாளில் எடுக்க வேண்டும். முறையான ஆவணங்கள் எல்லாம் எங்கள் கையில் உள்ளது" எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் இன்று நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ’கர’ படத்திற்கு தடை விதிக்ககோரி, சேலம் பூவாய் அம்மன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் வழக்கு கொடுத்துள்ளார்.

Dhanush

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ’கரா’ என்ற தலைப்பில் படப்பெயரை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டோம், படத்தின் தலைப்பை மாற்றக்கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ’கர’ என்ற பெயரை மாற்றாமல் படத்தை வெளியிடக்கூடாது என மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.