சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் `அசுரன்', `வாத்தி', `விடுதலை' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் கென் கருணாஸ். இப்போது இவர் ஹீரோவாக நடித்து, அவரே இயக்கி உருவாக்கியுள்ள படம் `யூத்'. பிப்ரவரியில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படம் பற்றி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் இயக்குநராக மாறியது பற்றி கூறிய போது "எனக்கு இயக்குநர் ஆகும் யோசனையே இல்லை. நான் வாடா ராசா என ஒரு ஆல்பம் செய்திருந்தேன். அதை வெளியிட சொல்லி தனுஷ் சாரை சந்திக்க போனேன். அப்போது நான் எதுவும் அடுத்து செய்யவில்லை என்பதை தெரிந்து கொண்டு, நான் நடிக்கும் படங்களில் ADயாக பணியாற்று என அழைத்தார். அப்படித்தான் `திருச்சிற்றம்பலம்' படத்தில் அவர் என்னை சேர்த்துவிட்டார். அதன் பிறகு தான் இதன் மேல் கவனம் திரும்பியது, கதை எழுத ஆரம்பித்தேன், இப்போது படம் இயக்கி இருக்கிறேன். இதற்கு காரணம் தனுஷ் சார் தான்.
எனக்கு வந்த கதைகள் எல்லாமே மிக சீரியஸான கதைகளாகவே வந்தன. எனவே ஜாலியான ஒரு கதையை நானே எழுதி வேறு இயக்குநரிடம் கொடுக்கலாம் என தான் ஆரம்பித்தேன். அந்தக் கதையை ஆர் ஜே பாலாஜி அண்ணனிடம் கூறிய போது, கதை நன்றாக இருக்கிறது என வாழ்த்து இதை நீயே இயக்கினால் தான் சரியாக இருக்கும் எனக் கூறினார். அவர் தந்த உற்சாகத்தில் இந்த படத்தின் முதல் பாதியை மொபைலில் படமாக்கி, அதை தயாரிப்பாளரிடம் போட்டு காட்டி தான் வாய்ப்பை பெற்றேன்" என்றார்.
விஜய் நடித்த `யூத்' படத்தின் தலைப்பை இதில் பயன்படுத்தியது பற்றி கூறுகையில் "முதலில் இந்தப் படத்தின் தலைப்பு வேறு ஒன்றை வைத்திருந்தோம். ஆனாலும் இன்னும் கவர்ச்சிகரமான ஒரு தலைப்பு வேண்டும் என யோசித்து வந்தோம். அப்போதுதான் `ஹேப்பி என்டிங்' பட இயக்குநர் அம்மாமுத்து சூர்யா `யூத்' தலைப்பை பரிந்துரைத்தார். அவரும் இந்தப் படம் நடக்க முக்கிய காரணம். கதையும் 10 - 12 படிக்கும் காலகட்டத்தில் நடப்பது என்பதால் அதற்கு இந்த தலைப்பு சரியாக இருந்தது. அதுவும் விஜய் சாருடைய தலைப்பு என்பது இன்னும் மகிழ்ச்சி" என்றார்.
சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் `அரசன்' படம் பற்றி கூறும்போது "படத்தில் நான் ஒரு சிம்பு நடிகனாக நடித்திருக்கிறேன். நிஜத்திலும் கூட சிம்பு ரசிகன் தான். அப்போது அப்பா சிம்பு, தனுஷ் என மாறி மாறி படங்களில் நடித்துக் கொண்டிருப்பார். `குத்து' பட சமயத்தில் எல்லாம் நான் பெரிய சிம்பு ரசிகன். இதை நான் தனுஷ் சாரிடம் கூட சொல்லி இருக்கிறேன். இப்போது சிம்பு - வெற்றிமாறன் சார் படம் நடக்கிறது. எப்போதுமே வெற்றி சார் படங்கள் எனக்கு ஸ்பெஷலான ஒன்று. அதில் சிம்பு இருக்கிறார் என்பது பெரிய மகிழ்ச்சி. அந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை என்றாலும், செட்டுக்கு போய் அவருடன் ஒரு போட்டோவாது எடுக்க வேண்டும்" என்றார்.