அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ள படம் `ப்ளாஸ்ட்'. இப்படம் மே 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்புக்கான செய்தியாளர் சந்திப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல்வர் விஜயைச் சந்தித்த அனுபவம் குறித்தும், ’முதல்வன்’ படத்தோடு ஒப்பிடுவது குறித்தும் அர்ஜூனிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்குப் பதில் சொன்ன அர்ஜூன், "CM ஆன பிறகு விஜய் சாரை சமீபத்தில் சந்தித்தேன். அவரைச் சந்திக்கும்போதுகூட இதையே தான் அவரும் கூறினார். ’நிறைய முதல்வன் பட மீம்ஸ் வருது சார். எனக்கு முதல் முறை அந்த நாற்காலியில் உட்காரப் போகும்போது முதல்வன் படம்தான் ஞாபகம் வந்தது’ என்று சொன்னார். சினிமா துறையில் இருந்து ஒருவர், நமக்குத் தெரிந்த, உடன் நடித்த ஒருவர் CM என்பது மிகவும் பெருமையான விஷயம். முதல் தேர்தலிலேயே CM ஆனார் என்பது மிகப்பெரிய சாதனை" என்றார்.
’தமிழில் விஜய், தெலுங்கில் பவன் கல்யாண் போன்றோர் அரசியலுக்கு வந்ததுபோல கன்னடத்தில் அர்ஜூன் அரசியலுக்கு வர எண்ணமில்லையா’ எனக் கேட்டதும், "நான் நன்றாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என நினைக்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் உள்ளிருந்து தோன்ற வேண்டும். எனக்கு அப்படி தோன்றவில்லை. நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதை இங்கிருந்தேகூட செய்யலாம்.
இப்போது உள்ள அரசியல் வேறு மாதிரி உள்ளது. முக்கியமாக பணம். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை" என்றார். உடனே விஜய்கூட பணம் கொடுக்காமல்தானே வந்தார் என்ற கேள்வி எழ, அதற்கு "அவர் அளவுக்கு நான் பெயர் சம்பாதிக்கவில்லையே" என்று கூறினார் அர்ஜூன்.