தமிழ் மொழியில் நிறைய சீரிஸ்களை தொடர்ந்து வெளியிடும் ஓடிடி தளம் ஜியோ ஹாட்ஸ்டார். ‘உப்பு புளி காரம்’, `போலீஸ் போலீஸ்' போன்ற தொடர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இப்போது புதிதாக இந்த தளத்தில் வெளியாகவுள்ள சீரிஸ் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’. இதுகுறித்த வெளியீட்டு தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தொடரில் போஸ் வெங்கட் மற்றும் காயத்ரி சாஸ்த்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, துணை பாத்திரங்களில் மேலும் ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் நடத்தி வரும் போஸ் வெங்கட் கட்டுப்பாடான குடும்ப தலைவர். குடும்பத்தை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் அமைதியான இல்லத்தரசியாக காயத்ரி சாஸ்த்ரி வருகிறார்கள். அவர்களது நான்கு பிள்ளைகள் வழக்கறிஞரான நிகிலா, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் லூதுப், டிஜேவாக இருக்கும் கிஷோர், கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் ஷ்வரனிதா என குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
குடும்பத்தின் கலகலப்பும், உணர்வுப்பூர்வமான உறவுகளும், நகைச்சுவையான தருணங்களும் நிறைந்த இந்த தொடரின் கதை சண்முக சுந்தரத்திற்கு இன்னொரு குடும்பம் இருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி உண்மை வெளிப்பட்டதும், குடும்பம் பிரியாமல் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் சகோதர சகோதரிகள் ஒன்றிணைகின்றனர், அதன் பின்னர் என்ன ஆகிறது என்பதே. இந்த வெப்சீரிஸை 'உப்பு புளி காரம்', 'போலீஸ் போலீஸ்' போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார். மே மாதம் முதல் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் மே 27 முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தொடரின் எபிசோட் வெளியாக உள்ளது.