பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து 1982ஆம் ஆண்டு வெளியான படம் `மூன்றாம் பிறை'. தமிழ் சினிமாவின் க்ளாஸிக் படமாக இன்றுவரை கொண்டாடப்படும் இந்தப் படத்துக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு. திரைப்பட மேதைகளில் ஒருவரான பாலு மகேந்திரா இப்படத்தை இயக்கியதோடு ஒளிப்பதிவும் செய்திருந்தார். இளையராஜா இசையமைத்த பாடல்கள் பலவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
இந்தப் படத்திற்காக கமல்ஹாசன் தனது முதல் தேசிய விருதான சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். மேலும் பாலு மகேந்திரா சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதையும் வென்றார். இதனுடன் பல தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களையும் பெற்றது. மேலும் இந்தியா முழுவதும் தொடர்ந்து ஒரு வருடம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி, அதன் மகத்தான வெற்றி மற்றும் நிலையான வரவேற்பை நிரூபித்தது. தலைமுறைகளை கடந்து கொண்டாடப்படும் இந்தப் படம், இன்றைய பல இயக்குநர்களை சினிமாவை நோக்கித் திருப்பியதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது இந்தப் படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு வெளியாகவுள்ளது. வழக்கமாக புதுப்பிக்கப்படும் பழைய படங்கள் திரையரங்கில் வெளியிடப்படும். ஆனால் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள `மூன்றாம் பிறை' படத்தின் புதிய பதிப்பு நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில், நாளை (மே 1) வெளியாகவுள்ளது.
இந்த வெளியீட்டின் மூலம் அடுத்த முறையினரும், பழைய ரசிகர்களும் இந்த அற்புதமான படைப்பை மீண்டும் ரசிக்கும் அரிய வாய்ப்பாக அமையும் என்கிறது தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி தரப்பு.