Pa Ranjith Vettuvam
கோலிவுட் செய்திகள்

" ‘வேட்டுவம்’ படத்தில் ஆர்யா வில்லனா?" - பா இரஞ்சித் சொன்ன தகவல் | Pa Ranjith | Vettuvam

நான் விரும்புகிற, என்னுடைய கருத்தை, எனக்கான சினிமா அழகியலை, என் சினிமா பார்வையிலான கதை உலகத்தை மக்களுக்கு புரியும்படியான சினிமாவாக கொடுக்கத்தான் எப்போதும் முயற்சிப்பேன்.

Johnson

தினேஷ், ஆர்யா நடிப்பில் பா இரஞ்சித் இயக்கி வரும் படம் `வேட்டுவம்'. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இப்படம் பற்றி பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார் இரஞ்சித். அந்தப் பேட்டியில், " ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு நடிகர்களின் பங்களிப்பு முடிந்து நிறைவடைந்துவிட்டது. கொஞ்சம் பேட்ச் ஒர்க் மட்டுமே பாக்கி உள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 5 மாதங்களில் அந்தப் படத்தை கொண்டுவர முயற்சித்து வருகின்றேன். தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக மாறுகிற எல்லா வாய்ப்பும் அந்தப் படத்துக்கு இருக்கிறது. சைன்ஸ் ஃபிக்ஷனில் ஒரு ஆக்ஷன் அட்வென்சர் படமாக சிறப்பாக வந்திருக்கிறது. மக்கள் இதை ஏற்றுக்கொண்டு கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

மக்கள் விரும்பும் சினிமாவைக் கொடுப்பது ஒரு வகை, நான் விரும்பும் சினிமாவை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் செய்வது இன்னொரு வகை. நான் விரும்புகிற, என்னுடைய கருத்தை, எனக்கான சினிமா அழகியலை, என் சினிமா பார்வையிலான கதை உலகத்தை மக்களுக்கு புரியும்படியான சினிமாவாகக் கொடுக்கத்தான் எப்போதும் முயற்சிப்பேன். அப்படித்தான் இந்தப் படமும் இருக்கும் என நினைக்கிறேன். என் முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட படமாக இருக்கும். என் முந்தைய படங்களின் எந்த சாயலும் இதில் இருக்காது.

தினேஷுக்கும் இது மிகப் புதுமையாக இருக்கும். சீரியஸாக வயதானவராக நடித்துக் கொண்டிருந்தவர் இதில் மிக இளமையாக மாறி இருக்கிறார். தற்காப்புக் கலைகள் எல்லாம் பயின்று நடித்துள்ளார். இதில் ஆர்யாவும் இருக்கிறார், ஆனால் அவரை வில்லன் எனச் சொல்ல முடியாது. இது ஐந்து கதாபாத்திரங்களை மையமாக கொண்ட பாத்திரம், இதில் ஒவ்வொருவரும், மற்றவருக்கு வில்லன்தான். சோபிதாவும் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த ஐந்து குழுக்களில் ஒவ்வொரு தலைவர் இருப்பார்கள். சோபிதா அதில் ஒரு குழுவின் தலைவி.

பா இரஞ்சித்

வேட்டை என்பது பலர் சேர்ந்து ஒன்றை வேட்டையாடுவது, வேட்டுவம் என்றால் பல குழுக்களுக்கு இடையேயான சண்டை. பல குழுக்களுக்குள் நிலவும் வேட்டை மனோபாவம், வேட்டை தன்மை இதைத்தான் வேட்டுவம் எனச் சொல்கிறார்கள்" என்றார்.