Director amir
Director amir pt desk
கோலிவுட் செய்திகள்

‘ஃபர்ஹானா’ சர்ச்சை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு... வாபஸ் பெற அமீர் கோரிக்கை!

Kaleel Rahman

மதம் சார்ந்து எடுக்கப்படும் படங்களுக்கு கடும் விமர்சனங்கள் வரும் அதே நேரத்தில், அந்தப் படங்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும்கூட பல தரப்பில் இருந்தும் வருகிறது. அப்படி சமீபத்தில்கூட, தி கேரளா ஸ்டோரி என்ற படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய தகவல்கள் இருப்பதாக பிரச்னை ஏற்பட்டது. அந்தப் படத்தை வெயியிட இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய அதே நேரத்தில், ‘இந்தப் படத்தை நிச்சயம் திரையிட வேண்டும்’ என ஆதரவும் எழுந்தது.

The Kerala story

அந்த சலசலப்புக்கு இடையேதான், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா என்ற திரைப்படம் வெளியாகினது. இந்த படத்திற்கு ஒருசில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. சில திரையரங்கில் நேரடியாகவே இந்த எதிர்ப்பு வெளிப்பட்டது. இதையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் உயிருக்கு ஆபத்து இருக்குமோ என்ற கோணத்தில், அவரது வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

farhana movie poster

அதில் அவர், “ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஃபர்ஹானா' திரைப்படம் குறித்து ஒருசில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களும் அந்தப் படத்தை எதிர்ப்பது போல் ஒரு தோற்றம் உருவாகி உள்ளது.

அமீர் அறிக்கை

மேலும் இஸ்லாமிய மக்களால் ஐஸ்வர்யா ராஜேஷ் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ.? என்கிற நோக்கில் அவரது இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் செய்தி உண்மையிலேயே எனக்கு வருத்தம் தருவதாக இருக்கிறது.

இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தி மத வேற்றுமையை உருவாக்கும் ஒரே நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தையும், 'ஃபர்ஹானா' திரைப்படத்தையும் ஒரே கோணத்தில் பார்க்கும் அளவிற்கு தமிழர்களும் இஸ்லாமியர்களும் அறிவில் குறைந்தவர்கள் இல்லை. இஸ்லாமியர்களை பற்றி இயக்குனரும், தயாரிப்பு நிறுவனமும் அவர்கள் அறிந்து வைத்திருக்கும் விதத்திலேயே ஃபர்ஹானா திரைப்படத்தை எடுத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

Aishwarya rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும் என்பதாலும், அவருக்கு இஸ்லாமியர்கள் மீது அன்பும், மரியாதையும் இருப்பதை நான் உணர்ந்திருப்பதாலும், இஸ்லாமிய கோட்பாடுகளை இழிவுபடுத்தும் உள் நோக்கோடு இத்திரைப்படத்தில் நடித்திருப்பார் என்பதையும், தீய நோக்கத்தோடு இத்திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் எடுத்திருக்கும் என்பதையும் நான் நம்பவில்லை.

எனவே இஸ்லாமிய கதாபாத்திரங்கள் உள்ள எல்லாத் திரைப்படத்துக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, இஸ்லாமிய சமூகத்தை ஒரு சகிப்பின்மை கொண்ட சமூகமாக சித்தரிக்க வேண்டாம் என்று இந்த அறிக்கையின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

The Kerala Story

தமிழ்நாடு மதவேற்றுமையை கடந்து ஒரு அமைதிப் பூங்காவாகவே எப்போதும் திகழ்கிறது. இனியும் அப்படியே தொடரும் என்ற நம்பிக்கையோடு ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் காவல்துறையின் பாதுகாப்பை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.