இந்திய திரையுலகில் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். `அலா வைகுண்டபுரம்' படத்துக்கு பிறகு இந்திய அளவில் கவனம் ஈர்த்தவர் `புஷ்பா' இரு பாகங்களுக்கு பிறகு உலக அளவில் புகழ்பெற்றார். தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்று அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர்.
இப்படத்திற்கு `ராக்கா' என தலைப்பிடப்பட்டுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவே உருவாகிவருகிறது இப்படம். இதில் நாயகியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். VFX தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது இப்படம். இதில் கஜோல், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாகூர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.
அல்லு அர்ஜூனின் 22ஆவது படமாக உருவாகிவரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ், த்ரி விக்ரம், பேசில் ஜோசப் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அல்லு அர்ஜூன்.