Alexander Babu A R Rahman
கோலிவுட் செய்திகள்

"ஏ.ஆர்.ரஹ்மான் கேட்ட ஒரு கேள்வி" - அலெக்சாண்டர் பாபு நெகிழ்ச்சி பதிவு | A R Rahman | Alexander Babu

10.30க்குள் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்பதால் சில பாடல்களை நீக்கலாம் என பேசிக் கொண்டிருந்தார்கள். என்னை மிக எளிதாகத் தவிர்த்திருக்கலாம். ஏன் நானே கூட அதை ஆமோதித்திருப்பேன்.

Johnson

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். அவர் தொடர்ச்சியாக பல கான்சர்ட்களை உலகம் முழுக்க நடத்தி வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் சென்னையில் பிப்ரவரி 14ம் தேதி `The Wonderment Tour' என்ற கான்சர்டை நடத்தினார். கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒரு சர்ப்ரைஸும் இருந்தது. பிரபல ஸ்டாண்டாப் கலைஞர் அலெக்சாண்டர் பாபு அந்த கான்சர்டில் பாடியது தான் அது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பாடியது குறித்தான தன் அனுபவத்தை நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார் அலெக்சாண்டர் பாபு.

தன் எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக அவர், ``கடந்த சில வாரங்களாக நடந்தவற்றிலிருந்து எப்போதும் மீள முடியாது என்றே நினைக்கிறன். A. R. ரஹ்மான் என் ரீல்ஸ் ஒன்றை ஷேர் செய்ததிலிருந்து எல்லாம் தொடங்கியது. 'அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட்' நிகழ்ச்சியில் ரஹ்மான் குறித்து நான் பேசிய ஒரு பகுதியை அவரே தனது பக்கத்தில் பகிர்ந்தார். அதுவே என் ஆசையையும் தாண்டிய ஒரு விஷயம், அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. அடுத்த சில நாட்களில் அவர் என்னை 'பாலோ' (Follow) செய்ததார். அதன் பின்னர் அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. நேர்காணலுக்குக் காத்திருந்த போது, ஏ.ஆர்.ரஹ்மான் எதேச்சையாக என்னைப் பார்த்து "ஹாய்" என்று பல ஆண்டுகால நண்பரைப் போலக் கூப்பிட்டது மெய்சிலிர்க்க வைத்தது. நேர்காணலின் போது பலமுறை ஆனந்தக் கண்ணீர் வந்தது. அதைத் தட்டுத்தடுமாறி கட்டுப்படுத்திக்கொண்டேன்.

நேர்காணலின் இறுதியில் இந்த உரையாடல் நிகழ்ந்தது

ஏ.ஆர்.ரஹ்மான்: "பிப்ரவரி 14-ம் தேதி ஃப்ரீயா இருக்கீங்களா? வந்து ஏதாவது பாடுறீங்களா?"

அலெக்ஸ்: "ங்கே?"

ஏ.ஆர்.ரஹ்மான் (தனது குழுவிடம்): "அலெக்ஸ்க்கு ஒரு பாடல் கொடுங்கலாம்ப்பா."

அலெக்ஸ்: "நிஜமாத்தான் சொல்லறீங்களா?"

ஏ.ஆர்.ரஹ்மான் (புன்னகையுடன்): " 'ராசாத்தி' பாடல் பாடுறீங்களா?"

அலெக்ஸ்: "அட கடவுளே, I LOVE Shahul Hameed. நிஜமாத்தான் சொல்லறீங்களா?"

Alexander Babu

அவ்வளவு தான், என்னை அவர் வேறு எதையும் கவனிக்காதபடி செய்தார். இரு வாரங்கள் கழித்து அது நிஜமாகவே நடந்தது. இசை நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையில், ரஹ்மான் காட்டிய அக்கறை நெகிழ்ச்சியடையச் செய்தது. 10.30க்குள் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்பதால் சில பாடல்களை நீக்கலாம் என பேசிக் கொண்டிருந்தார்கள். என்னை மிக எளிதாகத் தவிர்த்திருக்கலாம். ஏன் நானே கூட அதை ஆமோதித்திருப்பேன். ஆனால், நான் மேடையில் ஆசுவாசமாக உணர வேண்டும் என்பதற்காக எனக்காக மூன்று முறை என்னுடன் அமர்ந்து ஒத்திகை பார்த்தார். அங்கு வந்திருந்த மற்றவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள், ஆனால் எனக்கு அவர் கொடுத்த அந்த முக்கியத்துவம் பெரியது. 

பிப்ரவரி 14 அன்று அந்த மைதானமே அன்பால் நிறைந்திருந்தது. எனது பாடலை நீங்கள் அனைவரும் மனதார கொண்டாடிது, ஏ.ஆர்.ரஹ்மான் என்ற மனிதரின் அன்பின் நீட்சியாகவே எனக்குத் தெரிந்தது. நான் கட்சிதமாக பாடவில்லை, ஸ்ருதியிலிருந்து விலகினேன், cue-வை தவறவிட்டேன். ஆனால் என் மனதிலிருந்ததையும், பாடலின் ஆன்மாவையும் நீங்கள் புரிந்து கொண்டீர்கள். `இசை இருக்கும் வரை, அன்பு இருக்கும். அன்பு இருக்கும் வரை நம்பிக்கை இருக்கும், மனிதம் தழைக்கும்' அந்த இரவில் இதை தான் உணர்ந்தேன். ஏ ஆர் ரஹ்மான் புகழ்ச்சியையோ, நன்றியையோ விரும்ப மாட்டார். எனவே பிரபஞ்சத்துக்கு நன்றி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்  அலெக்சாண்டர் பாபு.