Leo - Vijay makkal Iyakkam
Leo - Vijay makkal Iyakkam File Image
கோலிவுட் செய்திகள்

முடிந்தது லியோ படப்பிடிப்பு பணிகள்.. அடுத்து அரசியல்தானா? - நிர்வாகிகளுடன் நாளை ஆலோசிக்கிறார் விஜய்!

சங்கீதா

விஜய்யின் 67-வது படமாக உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படம், வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தனது 68 ஆவது படத்தில் நடிக்கும் விஜய், அதன்பின்பு 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, வேறு படங்கள் எதிலும் ஒப்பந்தமாக முன்வரவில்லை என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

விஜய்

அதற்கு காரணமாக சில விஷயங்கள் முன்வைக்கப்பட்டன. உதாரணமாக அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது, கடந்த மே மாதம் 28 ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அங்குள்ள ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கியது, கடந்த மாதம் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு சென்னை நீலாங்கரையில், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கி விஜய் பாராட்டு தெரிவித்தது என்று பல விஷயங்கள் கூறப்படுகின்றன.

இதில் கல்வி விருது விழாவில், அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று பெற்றோரை வலியுறுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியது வைரலான நிலையில், தற்போது மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நாளை ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அருகேயுள்ள பனையூர் அலுவலகத்தில் நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அந்ததந்த தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தும் விஜய், பின்னர் அவர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் உள்ளார். மேலும், இந்தக் கூட்டத்தில் காமராஜர் பிறந்த நாளை (ஜூலை 15) வெகு விமரிசையாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தொகுதி வாரியாக கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இதனால் நாளைய சந்திப்பு, அரசியலில் அடுத்தகட்ட பயணத்துக்கான ஆலோசனையாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்தாண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகிவந்த ‘லியோ’ படத்தில், அவர் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சிறு இடைவெளிக்குப்பின் வெங்கட்பிரபுவின் படத்துக்கான வேலைகளை விஜய் தொடங்குவார் என சொல்லப்படுகிறது. அப்படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.