48 Years of Rajini
48 Years of Rajini Twitter
கோலிவுட் செய்திகள்

48 ஆண்டுகளாக மாறாத எளிமை... ‘அலப்பற கெளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்!’ #48YearsOfRAJINISM

Prakash J

வசூலை வாரிக் குவிக்கும் ‘ஜெயிலர்’!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான படம், ‘ஜெயிலர்’. பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருந்த இப்படம், உலகம் முழுவதும் கடந்த 10ஆம் தேதி வெளியானது. ’ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதுடன், வசூல்ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் கர்நாடக நடிகர் ஷிவ் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருப்பதாலும், தொடர்ந்து விடுமுறை நாட்கள் வந்ததாலும் இப்படம், தமிழ்நாட்டைத் தாண்டி பிற மாநிலங்களிலும் வசூலைக் குவித்து வருகிறது.

ரஜினியின் 48 ஆண்டுகள் திரைப்பயணம்

அதன்படி படம் வெளியாகி 3 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் உலக அளவில் ரூ.200 கோடியை அள்ளியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த உற்சாகத்துடன் ரஜினி ரசிகர்கள், அவருடைய 48 ஆண்டு திரைப் பயணத்தையும் இன்று கொண்டாடி வருகின்றனர். ஆம், தமிழ் சினிமாவின் ’சூப்பர் ஸ்டார்’ ஆகக் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், திரைத்துறையில் அறிமுகமாகி இன்றோடு (ஆகஸ்ட் 15) 48 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இயக்குநர் பாலசந்தர் மூலம் அறிமுகமான ரஜினி

சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற ரஜினி, மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் கவனிக்கப்பட்டார். அவரது இயக்கத்தில் 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, அதாவது இதே நாளில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகம் ஆனார். தொடர்து வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்த ரஜினி, ’பைரவி’ படத்தின் மூலம் ஹீரோவாக உருவானார். அதுமுதல் தன்னுடைய திறமையாலும், கடுமையான உழைப்பாலும் உச்ச நட்சத்திரமாய் உயர்ந்தார். இன்றுவரை அந்த இடத்தை தக்கவைத்தும் உள்ளார் சூப்பர்ஸ்டார்!

கருப்பு வெள்ளை - கலர் - டிஜிட்டல் என காலங்களும் கலைநயங்களும் எவ்வளவு மாறினாலும், அதற்கேற்ப தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக் கொள்பவர் ரஜினி!
Rajini

எளிமையிலிருந்து மாறாத ரஜினி

அவருடைய அந்த உழைப்புதான், அவரை தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக அவரை உருமாற்றியிருக்கிறது. ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா!’ என்று படையப்பாவிலேயே பாடிவிட்டார் ரஜினி. அதற்குப்பின் ‘பவுனென்ன பவுன்... கோடிகளில் கொடுக்கிறோம் பாருங்கள்’ என கூறினர் தமிழ் ரசிகர்கள்! ஆயிரத்தில் தொடங்கிய அவரது சம்பளம் இன்று கோடிகளைத் தொட்டுவிட்டது! இன்றுவரை அவரிடம் மாறாத ஒரேவிஷயம், அவருடைய எளிமை! அதனால்தான் அவர் சூப்பர்ஸ்டார்!

இன்றைய இளைய தலைமுறையினருடன் போட்டி!

ரஜினியின் இந்த 48 ஆண்டுகால திரைப்பயணத்தில், தற்போது வெளிவந்திருக்கும் ’ஜெயிலர்’, 169-வது படம். நடிப்பில் சாகசங்களை நிகழ்த்தக்கூடிய அசாத்தியக் கலைஞர் என்பதால்தான், ரஜினி இத்தனை ஆண்டுகள் கடந்து இன்றும், தமிழ் ரசிகர்களின் மனதில் அலப்பறை கிளப்புகிறார்! இன்றைய இளைய தலைமுறையினரோடும் போட்டிப்போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். ஜெயிலர் பாடலில் வருமே, ‘உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்!’ அதுதான் ரஜினியின் சினிமா கரியர்...!

2 மணி நேரத்திற்கும் மேலாக பாபாஜி குகைக்கு நடந்தே சென்ற ரஜினி!

ரசிகர்களெல்லாம் அவரை கொண்டாடிக்கொண்டிருக்க, இன்று மகாவதார் பாபாஜி குகைக்கு இரண்டு மணி நேரத்திற்குமேல் நடந்து மலையேறி சென்று தியானம் செய்துள்ளார் அவர். 72 வயதாகும் ரஜினி, புத்துணர்ச்சியோடு மலையேறி தியானம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

‘ஜெயிலர்’ படம் வெளியாவதற்கு முன்பே ரஜினி ஆன்மிகச் சுற்றுப்பயணமாக இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

rajini

முன்னதாக உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவிடத்தில் வணங்கி பயணத்தைத் தொடங்கியிருந்தார் ரஜினி!