அனுராக் காஷ்யப் மீதான பாலியல் புகார் நிரூபணமானால் அவருடான உறவை முறித்துக் கொள்ள தயார் என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார் என்றும், பிரதமர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்தப் புகாரால் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். பாயல் கோஷ் கூறியுள்ள புகாருக்கு அனுராக் காஷ்யப் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவி உள்ளிட்ட பலரும் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
அனுராக் காஷ்யப்பின் நெருங்கிய நண்பரான நடிகை டாப்ஸியும் அவருக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் ‘அனுராக் ஒரு மிகப்பெரிய பெண்ணியவாதி’ என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் டாப்ஸி கூறுகையில், அனுராக் காஷ்யப் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ளும் முதல் நபராக நான்தான் இருப்பேன். ஆனால் ஒருவரை ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுவது நியாயம் அல்ல.
இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்தால் #MeToo பிரச்சாரத்தின் புனிதத்தை எவ்வாறு நிலைநிறுத்த முடியும்? அனுராக் பெண்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். அவர் யாரையும் இடையூறு செய்வதில்லை. பெண்களை சரிசமமாக நடத்துபவர்’’ என்றார்.