இன்றைக்கு தைப்பூசம் ஆனால் ‘தர்பார்’ படத்தை வாங்கியவர்கள் ஆகிவிட்டார்கள் மோசம் என்று டி.ராஜேந்தர் கூறினார்.
இந்தப் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்படம் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாக விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர். இது சம்பந்தமாக ரஜினியை சந்திக்க அவரது வீட்டிற்கு விநியோகஸ்தர்கள் சென்றபோது வேறு நாள் சந்திப்பதாக கூறி, அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதனை அடுத்து படத்தின் இயக்குநர் முருகதாஸை சந்திக்க அலுவலகம் சென்ற விநியோகஸ்தர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் ‘தர்பார்’ பட விவகாரம் சம்பந்தமாக விநியோகஸ்தர்கள் மற்றும் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டி. ராஜேந்தர், அவரது பாணியில் ரைமிங் ஆக பேசினார். “ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தால் தமிழ்நாடு முழுவதும் திரைப்பட விநியோகஸ்தர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்படத்தை பெரிய விலை கொடுத்து அவர்கள் வாங்கி உள்ளனர். விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் இடம்தான் பணம் கொடுத்து உள்ளனர்.
ஆனால் லைகா அவர்களுக்கு சரியான பதிலை அளிக்கவில்லை.
பொங்கலுக்கு 6 நாட்கள் முன்பு ‘தர்பார்’ படத்தை வெளியிட்டதால் பொங்கல் அன்று இந்தப் படம் பழைய படம் ஆகிவிட்டது என்று விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். படம் முழுவதும் வெளி மாநிலத்தில் எடுத்ததன் காரணமாக இந்தப் படம் டப்பிங் படம்போல் ஆகிவிட்டது என்றும் விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். கோரிக்கை மனுவை முருகதாஸிடம் கொடுத்த ஒரே காரணத்தால் அவர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டு உள்ளன.
சங்கங்கள் இருக்கும்போது நேராக காவல்துறையிடம் சென்றால் அப்போது சங்கம் எதற்கு? தயாரிப்பாளர் படம் வெளியிட விநியோகஸ்தர்கள் ஒரு பாலமாகவே உள்ளனர். முருகதாஸ் பல வெற்றி படங்களை கொடுத்ததற்கு இந்த விநியோகஸ்தர்களும் ஒரு காரணம்.
காவல்துறையில் விநியோகஸ்தர் மீது முருகதாஸ் புகார் கொடுத்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இதற்கு முன்னதாக முருகதாஸ் இவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறாரா? இன்று தைப்பூசம். ஆனால் ‘தர்பார்’ படத்தை வாங்கியவர்கள் ஆகிவிட்டார்கள் மோசம்” என்றார். மேலும் படத்தை வாங்கியவர்களை காப்பாற்ற முடியாதவர் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார் என ரஜினியை மறைமுகமாக விமர்சித்தார்.