சினிமா

நிலவில் சொந்த இடம் வாங்கிய சுஷாந்த் சிங் ராஜ்புத் !

jagadeesh

பாலிவுட் திரையுலகில் நிலவில் முதல் முதலாக இடம் வாங்கியவராக அறியப்பட்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

தோனியின் சுயசரிதை படத்தில் நடித்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் சுஷாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்தின் சொத்துகள் குறித்த விவரங்களை "மனோரமா" இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் சுஷாந்த், ஒரு திரைப்படத்திற்கு 5 முதல் 7 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள செயின்ட் கெய்ர்ன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்ப படிப்பை முடித்தார் சுஷாந்த். அடுத்து டெல்லி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார்.

இதனைத்தொடர்ந்து தான் பாலிவுட்டில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் ஒன்றில் நடிகராக சுஷாந்த் அறிமுகமானார். நடிகர் சுஷாந்த் சொந்தமாக, நிலவில் இடம் ஒன்றை வாங்கியிருக்கிறார். இதன் மூலம் இந்தியாவிலேயே நிலவில் சொந்தமாக இடம் வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றார்.

இவருக்கு முன்பு பாலிவுட் கதாநாயகனான ஷாருக்கானுக்கு அவரது ரசிகர் நிலவில் இடம் பெற்று பரிசாக தந்தார். ஆனால் சொந்தமாக நிலவில் இடம் வாங்கிய முதல் நடிகர் சுஷாந்த் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மாரே மஸ்கோவியன்ஸ் அல்லது 'மஸ்கோவி கடல்' என்று அழைக்கப்படும் சந்திரனின் தூரப் பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தை வாங்கி இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட தொலைநோக்கியையும் நடிகர் சுஷாந்த் வாங்கியிருக்கிறார். மேலும் அவர் வாங்கிய அந்த தொலைநோக்கியை பயன்படுத்தி சனி கிரகத்தின் அழகிய வளையங்களை காணப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். சுஷாந்தின் சொத்து மதிப்பு ரூ 60 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.