எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
நடிகை மீராமிதுன் அண்மை காலமாக முன்னணி நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். அதிலும் சூர்யா, விஜய், த்ரிஷா போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இழிவாக பேசி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு விஜய், சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீரா மிதுனுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதையடுத்து இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டிருந்த அறிக்கையில், “நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. சூர்யா, கல்வி போன்ற நல்விஷயங்களை செய்து வருகிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்.
பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு என் உளப்பூர்வமான நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா சிலநாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற.”எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.