சினிமா

லண்டன் போகும் சூர்யா, கே.வி.ஆனந்த் படக்குழு

webteam

கே.வி.ஆனந்த் தனது புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

செல்வராகவன் இயக்கி வரும் ‘என்ஜிகே’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தை இந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனை அடுத்து சூர்யா, இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கெனவே இவரது இயக்கத்தில் சூர்யா, ‘அயன்’, ‘மாற்றான்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். வியபார ரீதியாக சூர்யாவுக்கு ‘அயன்’ நல்ல பெயரை சம்பாதித்து தந்தது. வெற்றிக் கூட்டணியாக கருதப்படும் இருவரும் மீண்டும் இணைவதால் அவரது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இந்நிலையில் சூர்யா தலைமையில் கே.வி.ஆனந்தின் படக்குழுவினர் வரும் ஜூன் 24ஆம் தேதி அன்று லண்டனுக்கு செல்ல உள்ளனர். அங்கே கவர்ச்சிகரமான இடங்களில் தங்களின் ஆரம்பக்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை எங்கே என படக்குழு பிறகு முடிவு செய்யும் என தெரிகிறது. இந்தப் படத்தை ‘லைகா’ பட நிறுவனம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இப்படத்திற்கு பட்டுக்கோட்டை பிரபாகரன் திரைக்கதை எழுதியுள்ளார். மலையாள படவுலகின் ‘மெகா ஸ்டார்’ மோகன்லால் இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.