சினிமா

ஆஸ்கருக்கு தகுதியானவர் சூர்யா: 'சூரரைப் போற்று’ க்காக கொடுத்திருக்க வேண்டும்: சுதீப்

sharpana

‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்கவேண்டும் என்று நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தீபாவளியையொட்டி ஓடிடியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு படமாக்கினார் சுதா கொங்கரா. தற்போது, நடிகர் சூர்யா,ஜோதிகா, ராஜசேகர் பாண்டியன், அபடண்ட்ஷியா எண்டர்டைன்மெண்ட் உள்ளிட்டவர்கள் இணைந்து இப்படத்தை இந்தியிலும் தயாரிக்கிறார்கள். இந்த நிலையில், நடிகர் கிச்சா சுதீப் ’சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

தனியார் வானொலிக்கு அவர் அளித்தப் பேட்டியில், “கடைசியாக ஓடிடியில் சூரரைப் போற்று திரைப்படம் பார்த்தேன். உண்மையை சொல்லவேண்டுமென்றால் சூர்யாவுக்கு ஆஸ்கர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர் அதற்கு தகுதியானவர். இது வழக்கமான ஒரு ஹீரோயிச திரைப்படம் கிடையாது. கேரியரில் உச்சத்தில் இல்லாத ஒரு காலகட்டத்தில் இப்படி ஒரு கதையை தேர்வு செய்வதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை நடிகர் சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘சூரரைப் போற்று’ ஆஸ்கார் விருதின் பொதுப்பிரிவு படங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பேட்டியின் வீடியோ லிங்க்கை பார்க்க: https://twitter.com/Suriya_offl/status/1419320628461522945?s=20