சினிமா

தேசிய பாதுகாப்புப் படை அதிகாரியாக மாறிய சூர்யா

webteam

‘காப்பான்’ திரைப்படத்தில் சூர்யா தேசிய பாதுகாப்புப் படை அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் ‘காப்பான்’. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் முன்னணி மலையாள நடிகரான மோகன்லால் முதன்முறையாக சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.  இந்தப் படத்தில் சூர்யா சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தன.

இந்நிலையில் சூர்யா மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் சமூகவலைத்தளத்தில் நேர்காணல் அளித்தனர். அதில் சூர்யா, “சமூக வலைத்தளங்களில் வெளிவந்த தகவல்கள் உண்மைதான். ‘காப்பான்’ திரைப்படத்தில் நான் தேசிய பாதுக்காப்புப் படை அதிகாரியாக நடிக்கிறேன். அத்துடன் இப்படத்தில் மோகன் லால் பிரதமர் வேடத்தில் நடிக்கவுள்ளார். முதன்முறையாக அவருடன் இணைந்து நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியாகவுள்ளது. ஏனென்றால் எனக்கு மோகன் லாலின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அவரின் படங்களைப் பார்த்து நான் நிறைய விஷயங்களைக் கற்றுகொண்டுள்ளேன். மேலும் இப்படம் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திரைக்கு வரும். இந்தப் படம் வெளியாகும் தேதி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

‘காப்பான்’ திரைப்படத்தில் சூர்யா, மோகன் லால் ஆகியவர்களுடன் இணைந்து சாயிஷா, ஆர்யா, சமுத்திரக்கனி, மயில்சாமி உள்ளிடவர்களும் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத் தக்கது.