செய்தியாளர் - M.மீரா
தமிழ்த் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதியான சூர்யா மற்றும் ஜோதிகா, தங்களது 20-ஆவது திருமண ஆண்டு விழாவை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர். இருவரும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற நிகழ்ச்சியில் மீண்டும் திருமண உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர். இது புதிய திருமணம் அல்ல; 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை கொண்டாடும் வகையில் நடைபெற்ற ‘Love renewel' நிகழ்ச்சியாகும்.
2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அவர்களது குழந்தைகளும், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் கலந்துகொண்டனர். நடிகரும் அவரது சகோதரருமான கார்த்தியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
தேவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜோதிகா வெள்ளை நிற திருமண கவுனிலும், சூர்யா வெள்ளை நிற டக்ஸீடோவிலும் தோன்றினர். ஜோதிகா மணப்பெண் போல தேவாலயத்திற்குள் நடந்து வர, அவரைக் கண்ட சூர்யா உணர்ச்சிவசப்பட்ட தருணங்களும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியின் வீடியோவை ஜோதிகா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு ’The Sequel – 20 years of love and war’ என அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களது அடுத்த 20 ஆண்டுகளையும் அன்பு, நட்பு மற்றும் பரஸ்பர புரிதலுடன் கடக்க வேண்டும் என்ற உணர்வையும் அவர் தனது பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.