சினிமா

வட இந்தியாவில் களைகட்டும் ‘புஷ்பா புடவை’ - குவியும் ஆர்டர்கள்

சங்கீதா

குஜராத்தில்  அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படத்தின் புகைப்படங்களால் டிசைன் செய்யப்பட்ட புடவை விற்பனை களைகட்டி வருகிறது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்து, கடந்த டிசம்பர் 17-ம் தேதி வெளியான திரைப்படம் 'புஷ்பா'. நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்தது. குறிப்பாக வட இந்தியாவில் இந்தப் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இந்தப் படத்தின் ஸ்ரீவள்ளி பாடலில் அல்லு அர்ஜூனின் நடன அசைவுகள் மற்றும் வனசங்களை ரசிகர்கள் மட்டுமின்றி, விளையாட்டு, சினிமா பிரபலங்களும் இமிடேட் செய்து தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் புடவைகளுக்கு பெயர்போன குஜராத் சூரத்தைச் சேர்ந்த சரண்பால் சிங் என்பவர், புஷ்பா திரைப்படத்தின் புகைப்படங்களால் டிசைன் செய்யப்பட்ட புடவை ஒன்றை தயாரித்து விற்பனை செய்துள்ளார். பின்னர் அந்த புடவைக்கு வரவேற்பு கிடைக்க 'புஷ்பா புடவை' வியாபாரம் களைகட்டியுள்ளது.

இதுவரை 3000-க்கும் அதிகமான புஷ்பா புடவைகளை தயாரித்து விற்பனை செய்துள்ளதாக சரண்பால் கூறியுள்ளார். முதலில் இந்த டிசைன் புடவையை தயாரித்த சரண்பால் சிங், தன்னுடைய சமூக வலைதளங்களில் அது குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதையடுத்து பலரும் அவரிடம் அந்த டிசைன் புடவைக்கான ஆர்டர் கொடுத்துள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து பெருமளவு ஆர்டர் வருவதாக சரண்பால் சிங் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தற்போது அந்த புடவை 'புஷ்பா புடவை' என்ற பெயரில் பிரபலமடைந்து வருகிறது.