விஜயின் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்காததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், நீதிபதிகள் வழக்கை விசாரிக்க விருப்பமில்லை எனத் தெரிவித்ததால், படம் வெளியீடு மேலும் தாமதமாகும்.
நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜனநாயகன். இப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டுவருகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கவேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், படத்திற்கு தணிக்கை சான்று வழங்கவேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவிற்கு எதிராக தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது தணிக்கை வாரியம்.
இந்தசூழலில் ஜனநாயகன் பட நிறுவனத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த உத்தரவால் படம் பொங்கலை தாண்டி செல்லும் நிலை ஏற்பட்டதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தது தயாரிப்பு நிறுவனம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை அமர்வுக்கு வந்தது.
அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க எங்களுக்கு விருப்பமில்லை, வழக்கில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை, உங்கள் தரப்பு வாதங்களை சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் தெரிவியுங்கள் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். ஜனநாயகன் பட வழக்கை ஜன.20ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவித்துள்ளது. ஜனநாயகன் பட ரிலீஸை எதிர்நோக்கி காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தை தந்துள்ளது.