சினிமா

பிரதமர் மோடி திரைப்படம்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

webteam

’பிஎம் நரேந்திர மோடி’ படத்தை தேர்தல் ஆணையம் பார்த்து, இப்போது வெளியிடுவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை கதை, ’பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் சினிமாவாக உருவாகியுள்ளது. மேரி கோம், சர்ப்ஜித் ஆகிய வாழ்க்கைக் கதைகளை இயக்கிய ஓமங்க் குமார் இயக்கியுள்ளார். விவேக் ஓபராய், நரேந்திர மோடியாக நடித்துள்ளார். இவர் தமிழில் அஜீத்தின் விவேகம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மனோஜ் ஜோஷி, அமித் ஷாவாகவும் ஷரினா வகாப் மோடியின் அம்மாவாகவும் பர்கா பிஸ்ட் செப்குப்தா மோடியின் மனைவியாகவும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்தே எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆதாயத்துக்காக பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்தப் படத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். இந்த விசாரணையில் தேர்தல் விதிமுறைகளை படம் மீறுவதாக கருதவில்லை எனவும் ‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இதையடுத்து அந்தப் படத்தை இப்போது வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்நிலையில் இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (15.4.2019) விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்தப் படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டு தேர்தல் நேரத்தில் வெளியிடலாமா, வேண் டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆணையத்தின் கருத்தை சீலிடப்பட்ட கவரில் வரும் 22 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.