சினிமா

சுமார் மூஞ்சி குமாரைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி: விஜய் சேதுபதி!

sharpana

’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் ஆவதையொட்டி, அப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி இயக்குநருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி, நந்திதா, அஸ்வின், ஸ்வாதி ரெட்டி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, இதே நாளில் வெளியான ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் பலர் நடித்திருந்தாலும் எல்லோரையும் ஈர்த்தது என்னவோ சுமார் மூஞ்சி குமாராக நடித்த விஜய் சேதுபதிதான். 

வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இப்படத்தை இயக்கியவர் ரெளத்திரம், காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல். சுமார் மூஞ்சி குமாராக எப்போதும் நந்திதாவை காதலித்தும் வம்பிழுத்தும் நடிப்பில் அதகளம் பண்ணியிருப்பார் விஜய் சேதுபதி.

பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரியில் ’நீ எங்கே போனாலும் நான் ப்ரே பண்ணுவேன்’  பாடல் ஒன்சைட் காதலர்கள், பிரிந்த காதலர்கள், திருமணமாகாத 90ஸ் கிட்ஸ்கள், இனிமேல் காதலிக்கப்போகும் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விஜய் சேதுபதி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”சுமார் மூஞ்சி குமாரைக் கொடுத்த இயக்குநர் கோகுலுக்கு நன்றி. குமுதா ஹேப்பி அண்ணாச்சி” என்று நன்றியோடு நகைச்சுவையாக தெரிவித்திருக்கிறார்.