சினிமா

நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று தகனம்

நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று தகனம்

Rasus

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல், நீண்ட சட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது. இன்று பிற்பகலில் தகனம் செய்யப்படும் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லம் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அங்கு சென்ற ஸ்ரீதேவி, குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக துபாயில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையால் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் மரணத்தில் குற்றநோக்கம் எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து இந்த வழக்கை துபாய் காவல்துறை முடித்து வைத்தது. 3 நாட்களுக்குப் பிறகு உரிய நடவடிக்கைகளுக்குப் பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அதன் பின்னர் ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்தப்பட்டு அனில் அம்பானிக்கு சொந்தமான தனிவிமானம் மூலம் நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட அவரது உடல், மும்பை க்ரின் ஏக்கர்ஸ் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர், இறுதியஞ்சலி செலுத்த அங்கு திரண்டுள்ளனர்.

ஸ்ரீதேவியின் உடல் போனி கபூருக்குச் சொந்தமான செலிபிரேஷன் கிளப் வளாகத்தில் காலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பொது மக்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து 3 நாட்களாக அவரது இல்லத்தின் முன் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

ஸ்ரீதேவியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் மதியம் இ‌ரண்டு மணியளவில் செலப்ரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப்பிலிருந்து தொடங்கி பவன் ஹன்ஸ் பகுதி வரை இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. பிற்பகல் 3:30 மணியளவில் வைல் பார்லே சேவா சமாஜ் தகன மையத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.