சினிமா

திருமூர்த்தி குரலில் விரைவில் ஆத்மார்த்தமான பாடல் - இமான் மகிழ்ச்சி!

webteam

நொச்சிப்பட்டி திருமூர்த்தியை பின்னணி பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைவதாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டியைச் சேர்ந்த கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் 'கண்ணான கண்ணே' பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை தன் செல்போனில் படம் பிடித்த ஒருவர், இசையமைப்பாளர் இமானுக்கும், பாடகர் சித் ஸ்ரீராமுக்கும் டேக் செய்து ட்வீட் செய்தார்.

இதனைக் கண்ட இமான், அவருடைய விவரங்கள் கிடைக்குமா என கோரிக்கை விடுத்தார். அடுத்த சில மணிநேரங்களில் அவருடைய தகவலைப் பெற்ற இமான், திருமூர்த்தியின் தகவல்களை கொடுத்தோருக்கு நன்றி. விரைவில் அவரை பாட வைக்க உள்ளேன். திருமூர்த்திக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என தெரிவித்துள்ளார். அதேபோல் பாடகர் சித் ஸ்ரீராமும் திருமூர்த்தி குரல்வளத்தை பாராட்டினார்.

இந்நிலையில் திருமூர்த்தி தன் இசையில் ஒரு மனம் உருகும் பாடலை பாடியுள்ளதாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் படத்தின் விவரம் குறித்தும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அதில், ''நொச்சிப்பட்டிதிருமூர்த்தியை பின்னணி பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. ரத்தினசிவா இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் என்னுடைய அடுத்தப்படமான சீறுவில் அவர் பாடவுள்ளார். பார்வதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஆத்மார்த்தமான பாடல் விரைவில் வருகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.