சினிமா

நாளை முதல் படப்பிடிப்புக்கு அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

webteam

சினிமா படப்பிடிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகியுள்ளன.

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஜூலை மாதம் முதல் ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் செப்டம்பர் 1முதல் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோயில்கள் திறப்பு, வணிக வளாகங்கள் திறப்பு, மாவட்டத்துக்குள் பேருந்து வசதி என பல தளர்வுகளை முதலமைச்சர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இந்நிலையில் நாளை முதல் தளர்வுகள் அமலுக்கு வருவதால் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியீட்டுள்ளது. கோவில், வணிக வளாகம், பேருந்தும் திரைப்பட படப்பிடிப்பு என தனித்தனியே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி சினிமா படப்பிடிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகியுள்ளது.

  • 75 பேர் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதி
  • 6 அடி தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். படப்பிடிப்பு தளம் மட்டுமின்றி சவுண்ட் ரெக்கார்டிங், எடிட்டிங் அறைகளிலும் கடைபிடிக்க வேண்டும்
  • படப்பிடிப்புக்கு பார்வையாளர்கள், ரசிகர்களை அனுமதிக்க கூடாது
  • வெளிப்புற படப்படிப்பு என்றால் அந்த உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும்
  • உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனிப்பாதைகள் உருவாக்க வேண்டும்
  • படப்பிடிப்பு தளம், வாகனங்கள், மேக்கப் அறை, கழிவறை என அனைத்து இடங்களும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்,
  • பயன்படுத்திய மாஸ்க், கையுறைகள் போன்ற பொருட்களை பத்திரமாக அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்களுக்குபயிற்சி அளிக்க வேண்டும்
  • கேமரா முன்னால் இருக்கும் நடிகர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்
  •  ஆடைகள், விக், மேக்கப் பொருட்கள் போன்ற பகிரக்கூடிய பொருட்களை முடிந்தவரை குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும்
  • முடிந்தவரை மைக் பயன்படுத்தக் கூடாது. அல்லது கண்டிப்பாக பகிராமல் இருக்க வேண்டும்
  • படபிடிப்பில் கலந்துகொள்வர்களின் மருத்துவ விவரம், பயண விவரம் உள்ளிட்டவைகளை கண்காணித்து சரியாக கடைபிடிக்க வேண்டும்

இன்னும் பல பொதுவான வழிமுறைகளை அரசு தெரிவித்துள்ளது