சினிமா

பொம்மியை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி: சூரரைப் போற்று அபர்ணா பாலமுரளி நெகிழ்ச்சி

sharpana

’சூரரைப் போற்று’ வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி, ’பொம்மியாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட்டது. தீபாவளி வாழ்த்துகளைவிட சமூக வலைதளங்களை பெரிதும் ஆக்கிரமித்திருந்தது சூரரைப் போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளிதான்.கடந்த நவம்பர் 11 ஆம் தேதி வெளியான சூரரைப் போற்று படத்தைப் பார்த்துவிட்டு ’சூர்யாவை போற்று’  ’சுதாவைப் போற்று’ என்று இருவரது ரசிகர்களும் போற்றிக்கொண்டிருந்தனர். ஆனால், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் போற்றியது ஹீரோயினாக பொம்மி பாத்திரத்தில் நடித்த அபர்ணா பாலமுரளியைத்தான்.

 ‘பொம்மிபோல் தனக்கு ஒரு மனைவி கிடைக்க மாட்டாளா?’  என்று  திருமணமாகாத சிங்கிள்ஸ்கள் மட்டுமல்ல; திருமணமான டபுள்ஸ்களையே அபாரமான நடிப்பால் ஏங்க வைத்தார், அபர்ணா பாலமுரளி.

திருமணத்துக்கு முன்பு மணமகள் வீட்டை மாப்பிள்ளைகள் பார்த்து விடுகிறார்கள். ஆனால், தான் வாழப்போகும் வீட்டை மணமகள்கள், திருமணமானப் பிறகே பார்க்கவேண்டிய அவலநிலை இன்னும் நிலவி வருவகிறது. அதை, உடைத்தெரிந்து மாஸ் ஓப்பனிங் எண்ட்ரி கொடுக்கும் அபர்ணா பாலமுரளி படத்தில் சுயமரியாதைப் பெண்ணாக நடித்து சூப்பர் சொல்ல வைத்தார்.

அதேமாதிரி, உங்களுக்கு ஏற்கெனவே கல்யாணமாகிடுச்சு. ப்ளைனு. அதேமாதிரி, எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. (பேக்கிரி) மொத கல்யாணத்துல ஏதாவது சாதிக்கமுடியுதா பார்ப்போம் என்று தனக்கான லட்சியத்தையும் விட்டுக்கொடுக்காமல் கெத்தாக வெளிப்படுத்தி, அதிலும் சாதித்து பெண்களுக்கு தன்னம்பிக்கையளிக்கிறார். ஓவராக நடிக்காமல் காட்சிக்கு காட்சி வாய்ப் பேச்சையே ஓவர் டேக் செய்தது அபர்ணா கண்களால் பேசும் டயலாக்குகள்.

தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாள மொழிகளில் வெளியான இப்படம் அங்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அங்கும் பொம்மியாக நடித்த அபர்ணா பாலமுரளியை போற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். படத்தைப் பார்த்த கேப்டன் கோபிநாத்தே பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சூரரைப் போற்று பெரும் வெற்றியடைந்ததையொட்டி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”சூரரைப் போற்று படத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு நன்றி. பொம்மியை ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.