சினிமா

”ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்; இல்லையென்றால்..” - சோனு சூட் எச்சரிக்கை

webteam

சோனுசூட் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வந்த நபரை தெலங்கானா காவல்துறை கைது செய்துள்ளது.

ஊரடங்கு காலங்களில் வேறு நாடுகளில் சிக்கி தவித்தவர்கள் தாயகம் திரும்ப உதவுதல், விவசாய குடும்பத்திற்கு டிராக்டர், இளம்பெண்ணின் அறுவை சிகிச்சை பண உதவி உள்ளிட்ட பல உதவிகளை செய்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் சோனு சூட். அண்மையில் இவரது சேவையை பாராட்டி தனியார் விமான நிறுவனமான ஸ்பேஸ் ஜெட், இவரது புகைப்படத்தை விமானத்தில் பதிந்து கெளரவப்படுத்தியது.

இதனிடையே, சோனு சூட்டின் பெயரைப் பயன்படுத்தி சிலர் மக்களை ஏமாற்றுவதாக புகார் எழுந்தது. அந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் தெலங்கானா காவல் துறை ஒருவரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சோனு சூட், “ உதவி நாடுபவர்களை ஏமாற்றும் இது போன்ற குற்றவாளிகளை கண்டறிய உதவிய தெலங்கானா காவல்துறைக்கு நன்றி. இது போன்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் உடனடியாக அதனை நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லை என்றால் நீங்கள் விரைவில் ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.