சினிமா

''இந்த படத்தை மாநாடு2 என்றே சொல்லலாம்'' - எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புதிய படம்

கலிலுல்லா

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா

வீரமே வாகை சூடும், லத்தி படங்களை தொடர்ந்து விஷால் நடிக்கும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இவர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, AAA & பஹீரா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியது. மார்க் ஆண்டனி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை எனிமி படத் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ''கடவுளே, எல்லா நல்ல கதைகளையும் என்னிடமே அனுப்புகிறாயே. ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்டிப்பாக இந்தப் படம் வெற்றிபெறும். இந்தப் படத்தை 'மாநாடு 2' என சொல்லலாம். அப்படி ஒரு திரைக்கதை. இந்தப் படம் வெற்றிகளை குவிக்கும்'' என தெரிவித்துள்ளார்.