சினிமா

சிவகார்த்திகேயனின் ‘SK20’ படப்பிடிப்பு இன்று முதல் துவக்கம்- எந்த மாவட்டத்தில் தெரியுமா?

சங்கீதா

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர், நெல்சன் இயக்கத்தில், சமீபத்தில் நடித்து வெளியான ‘டாக்டர்’ படம், ரூ.100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது. மேலும், சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம், வரும் மார்ச் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்புகளும் முடிந்து, ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், முதன்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இந்தப் படத்தை ‘ஜதி ரத்னாலு’ படத்தை இயக்கிய அனுதீப் இயக்குகிறார். பொங்கலுக்குப் பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாக இருந்தநிலையில், கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்காலிகமாக ‘SK20’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்புகள், இன்று முதல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் துவங்குகிறது. இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சத்யராஜ், சிவகார்த்திகேயனுடன் இணைகிறார். நவீன் பாலிஷெட்டி மற்றும் பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்தப் படத்தை, ஸ்ரீவெங்கடேஸ்வரா சினமாஸுடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.