சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் pt web
சினிமா

அயலான் எப்படி இருக்கும்? ரஜினிமுருகன் டயலாக் மூலம் சிவகார்த்திகேயன் சொன்ன செம பதில்!

Angeshwar G

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அயலான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இதில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏலியனை கதைக்களமாக கொண்டு அயலான் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அயலான்

ஏலியன் கதாபாத்திரத்திற்கு, நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். 2018 ஆம் ஆண்டே இந்த திரைப்படத்தின் பணிகள் தொடங்கிய நிலையில், பொருளாதார பிரச்சினைகள் காரணமாக முடங்கியது. தற்போது அத்தனைக்கும் தீர்வு கண்ட நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் அயலான் திரைப்படம் இன்று வெளியானது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் வெளியான அயலான் படத்தை தனது ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்த சிவகார்த்திகேயன், ரசிகர்களை நோக்கி கை அசைத்தார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், “ஃபிக்சன் மற்றும் ஃபேண்டஸி விஷயங்களை சேர்ந்தது இப்படம். நம் ஊரில் இம்மாதிரியான திரைப்படங்கள் மிகக்குறைவு. அதை முயற்சி பண்ணியுள்ளோம் என்பது மிகவும் சந்தோஷமான விஷயம். அதிகமான சிஜி காட்சிகளை நமக்கு கொடுக்கப்படுகிற பட்ஜெட்டில் சரியாக நிகழ்த்தி காட்ட வேண்டும் என்பதுதான் மொத்த குழுவின் உழைப்பும். எவ்வளவு சிறப்பாக பண்ணமுடியுமோ அவ்வளவு சிறப்பாக பண்ணியுள்ளோம். மற்றவர்களின் கருத்துக்காக காத்திருக்கின்றேன். நம்பி வாங்க சந்தோஷமா போங்க.. ரிப்பீட்ல வாங்க..” என தெரிவித்தார்

இந்த வசனம் ரஜினிமுருகன் திரைப்படத்தில் ஆவி பறக்கும் டீக்கடை பாடலுக்கு முன் எஸ்.கே. பேசி பிரபலமான வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.