சினிமா

8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 'சிப்பாய்' திரைப்படத்தின் படப்பிடிப்பு

Sinekadhara

கவுதம் கார்த்திக் - லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் 'சிப்பாய்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

ஒளிப்பதிவாளரும், சிலம்பாட்டம் படத்தின் இயக்குநருமான சரவணன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் சிப்பாய். இந்தப்படத்தில் கவுதம் கார்த்திக், லட்சுமி மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. 80 சதவீத வேலைகள் முடிவடைந்த நிலையில்,  தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதிப் பிரச்னை காரணமாக படப்பிடிப்பு பாதியில் நின்றது. அதற்குபிறகு பலமுறை படப்பிடிப்பைத் தொடங்க முயற்சி செய்தபோதும், அது தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் தணிகைவேல் என்பவர் 2017-ஆம் ஆண்டு சிப்பாய் படத்தின் உரிமையை பெற்றார். அதன்பின்பு படப்பிடிப்பு வேலைகளை தொடங்க திட்டமிட்டனர். ஆனால் அனைத்துப் பிரச்னைகளையும் முடித்து படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் சிப்பாய் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது மீதமிருக்கும் காட்சிகளை படமாக்கி வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டிருக்கிறார். அதற்கான படப்பிடிப்பும் தற்போது தொடங்கியுள்ளது. இதன்மூலம் பல ஆண்டுகளாக முடங்கியிருந்த சிப்பாய் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.