சினிமா

ஆதாரமில்லாமல் அவதூறு வீடியோ போடுவதா? - பயில்வான் ரங்கநாதனால் கொதித்துப்போன சுசித்ரா!

JananiGovindhan

தன்னை பற்றி அவதூறாக பேசி வரும் நடிகரும் யூடியூப் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாடகி சுசித்ரா புகார் அளித்துள்ளார்.

 வல்லவன் படத்தில் அம்மாடி ஆத்தாடி, போக்கிரியில் டோலு டோலு, என் செல்லப்பேரு ஆப்பிள், யாரடி நீ மோகினி படத்தில் நெஞ்சை கசக்கி பிழிந்து போற, கந்தசாமி படத்தில் எக்ஸ்க்யூஸ் மிஸ்டர் கந்தசாமி, வேட்டைக்காரன் படத்தில் ஒரு சின்னத்தாமரை, சிறுத்தை படத்தில் ராக்கம்மா ராக்கு உள்ளிட்ட ஹிட் பாடல்கள் மூலம் பிரபலமானவர் பாடகி சுசி. டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் ஒரு ரவுண்ட் வலம் வந்தவர். சில படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளார்.

சுசி லீக்ஸ் என்ற பெயரில் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாடகி சுசித்ரா தன்னை பற்றி அவதூறாக பேசி வரும் நடிகரும், யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் எந்த வித ஆதாரமும் இன்றி குற்றம் சுமத்தி யூடியூப் வீடியோவில் பேசி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து எந்த வித ஆதாரமுமில்லாமல் யூடியூப்பில் நடிகைகள் பற்றி பேசி வருவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது குறித்து பயில்வான் ரங்க நாதனிடம் பேசிய போது, உரிய பதில் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். ஏற்கனவே suchi leaks மூலமாக எனது தொழில் பாதிப்படைந்து, மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் பயில்வான் ரங்க நாதன் தன்னை பற்றி அவதூறு கருத்து பரப்பி வருவதாக தெரிவித்துள்ளார். ஆகவே உடனே பயில்வான் ரங்க நாதன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என சுசித்ரா புகாரில் தெரிவித்துள்ளார்.