சினிமா

‘பத்து தல’ : 10 இயக்குநர்கள் வெளியிட்ட ’சிம்பு – கெளதம் கார்த்திக்’ படத்தின் தலைப்பு

sharpana

சிம்பு - கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகி இருப்பது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

கடந்த 2017 ஆ,ம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியான ’மஃப்டி’ படம் சூப்பர் ஹிட் அடித்து வசூல் சாதனையும் செய்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, சிவ ராஜ்குமார் கேரக்டரில் சிம்புவும், ஸ்ரீ முரளியாக கெளதம் கார்த்திக்கையும் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

கடந்த ஆண்டு இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் சில நாட்கள் நடந்த நிலையில், சிம்புவின் கால்ஷீட் பிரச்சனையால் படம் பாதியிலேயே நின்றது. இந்நிலையில், சிம்பு உடலைக் குறைத்து ஈஸ்வரன், மாநாடு படங்களில் சரியான நேரத்திற்கு வந்து ஒத்துழைப்புக் கொடுப்பதால் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு தயாராகிவிட்டது. இப்படத்தை, சில்லுனு ஒருகாதல் இயக்குநர் கிருஷ்ணா இயக்குகிறார்.

நாளை படத்தின் தலைப்பு வெளியாகும் என்று நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தனர் படக்குழுவினர். இந்நிலையில், இன்று  காலை  “பத்து தல” என்று படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். வெங்கட் பிரபு, ராஜேஷ், ஆனந்த் சங்கர், விக்னேஷ் சிவன், விஜய் மில்டன், கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித், சந்தோஷ் ஜெயக்குமார், அஸ்வத் மாரிமுத்து, சாம் ஆண்டன் என படத்தின் தலைப்பு ’பத்து தல’ என்பதால் என்னவோ பத்து இயக்குநர்கள் இன்று படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர்.